வயநாட்டை ராகுல், பிரியங்கா மறந்துவிட்டனர்: காங்., அலுவலகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு

7


திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியை ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் மறந்துவிட்டனர் எனக்கூறி போஸ்டர் ஒட்டியவர் மீது கேரளாவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கடந்த லோக்சபா தேர்தலில் உபியின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் ராகுல் வெற்றி பெற்றார். பிறகு வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார். இதன் பிறகு, நடந்த இடைத்தேர்தலில், அவரது சகோதரி பிரியங்கா போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.


சமீபத்தில் நடந்து முடிந்த கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நீண்ட இழுபறிக்கு பிறகு, அக்கட்சியின் மூத்த தலைவர் வி.டி. சதீஷன் முதல்வராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று அவர் பதவியேற்க உள்ளார். முதல்வர் பதவியை அடைய ராகுலுக்கு நெருக்கமானவரான கே.சி. வேணுகோபால் முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.


இந்நிலையில், வயநாட்டில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வயநாடு தொகுதியை ராகுல் மற்றும் பிரியங்கா மறந்துவிட்டனர் என போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.


மேலும் போஸ்டர்களில் கூறப்பட்டு உள்ளதாவது: கேசி வேணுகோபால் உங்களின் பையை தூக்குபவராக இருக்கலாம் ராகுல். ஆனால், கேரள மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் எனக்கூறப்பட்டுள்ளது.


மற்றொரு போஸ்டரில், இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட்டால், அமேதி அளித்த முடிவுகளையே வயநாடும் அளிக்கும் எனக்கூறப்பட்டுள்ளது. மேலும், வயநாடு தொகுதியை ராகுலும், பிரியங்காவும் மறந்துவிட்டனர் எனவும் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக அந்த பகுதியில் உள்ள வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், நபர் ஒருவர் போஸ்டர் ஒட்டியது தெரியவந்தது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement