கோட்டக்குப்பம் அருகே நடந்த ரவுடி கொலை வழக்கில் 10க்கும் மேற்பட்டோருக்கு போலீஸ் வலை  

கோட்டக்குப்பம்: கோட்டகுப்பம் அருகே ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், பத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

மரக்காணம் அருகேயுள்ள கூனிமேடுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் சிவகுரு, 37; ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, வெடிகுண்டு தயாரித்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கீழ்புத்துப்பட்டு அடர்ந்த காட்டுப்பகுதியில், இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த மாதேஸ்வரன், புதுக்குப்பத்தை சேர்ந்த சரவணன் ஆகியோருடன் அமர்ந்து மதுகுடித்தார். அங்கு வந்த மர்ம கும்பல் ரவுடி சிவகுருவை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றது.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், கூனிமேடு கடற்கரையில் நடந்த மாசி மக திருவிழாவில் சாமி ஊர்வலத்தில் சிவகுரு தரப்பினருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பொக்கை கார்த்திக், பிரகாஷ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.

அடர்ந்த காட்டுப்பகுதியில் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதால், சம்பவ இடத்தில் போதிய அடையாளங்கள் எதுவும் சிக்கவில்லை. சில நுாறு மீட்டர் துாரத்திற்கு பைக்கை நிறுத்தி விட்டு நடந்து வந்த கும்பல், சிவகுருவை சுற்றி வளைத்து கொலை செய்து விட்டு தப்பித்துள்ளனர்.

கொலை செய்த கும்பல் கடல் வழியாக கப்பலில் தப்பித்தார்களா அல்லது வேறு பகுதிக்கு தப்பித்தார்களா என்பது குறித்து அப்பகுதி மீனவர்களிடையே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் சந்தேகித்து தேடி வரும் நபர்களின் மொபைல் எண்கள் சுவிட் ஆப் செய்யப்பட்டிருப்பதால், 10க்கும் மேற்பட்டோர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  

Advertisement