மாநில செஸ் போட்டியில் சென்னை கவின், திருச்சி பவித்ரா அணிகள் சாம்பியன்

நாமக்கல்:மாநில அளவிலான செஸ் போட்டியில், ஓபன் பிரிவில் சென்னை கவின், பெண்கள் பிரிவில் திருச்சி பவித்ரா அணிகள், சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர்.



சென்னையை சேர்ந்த கவின் ஓபன் பிரிவிலும், திருச்சியை சேர்ந்த பவித்ரா பெண்கள் பிரிவிலும் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றனர். தமிழ் மாநில சதுரங்க சங்கம், நாமக்கல் மாவட்ட சதுரங்க வளர்ச்சி கழகம் சார்பில், 'தமிழ்நாடு மாநில சப்--ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப்-2026' போட்டி, நாமக்கல் அடுத்த எர்ணாபுரத்தில் நடந்தது.

கடந்த, 13ல் துவங்கி , ஐந்து நாட்கள் நடந்த இப்போட்டி, சப்-ஜூனியர், 15 வயதுக்கு உட்பட்டோர் ஓபன் சாம்பியன்ஷிப், 38வது மாநில சப்-ஜூனியர், 15 வயதுக்குட்பட்டோர் பெண்கள் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அதில், தமிழகம் முழுவதும் இருந்து, ஓபன் பிரிவில், 262 பேர், பெண்கள் பிரிவில், 182 பேர் என, மொத்தம், 444 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நிறைவு விழாவிற்கு, நாமக்கல் மாவட்ட சதுரங்க வளர்ச்சி கழக தலைவர் டாக்டர் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில சதுரங்க சங்க துணை தலைவர் அருண், நாமக்கல் மாவட்ட சதுரங்க வளர்ச்சி கழக துணைத்தலைவர் செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டியின் தலைமை நடுவராக பழனியப்பன், துணை நடுவராக சிவராமகிருஷ்ணன் ஆகியோர் செயல்பட்டனர். போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு, கேடயம், சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதில், தேசிய போட்டிக்கு, ஓபன் பிரிவில், சென்னை கவின், மிர்தவ், திருவள்ளூர் பிரணவ்சாய் ராம், கோவை கிஷோர் பிரஜித் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், பெண்கள் பிரிவில், திருச்சி பவித்ரா, சேலம் ஸ்ரீநிதி, செங்கல்பட்டு ஸ்ரீநிகா, மதுரை ஹர்ஷிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள், வரும் செப்.,ல் பஞ்சாப் மாநிலத்தில் நடக்கும் தேசிய செஸ் போட்டியில் பங்கேற்பர்.

Advertisement