மாரியம்மன் கோவில் திருவிழா: 54ம் ஆண்டு பால்குட ஊர்வலம்

குளித்தலை:குளித்தலை, முத்துபூபால சமுத்திரத்தில், மகா மாரியம்மன் கோவில்
அமைந்துள்ளது.

இக்கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, கடந்த, 3ல் கம்பம் நடுதல், பூச்சொரிதலுடன் விழா துவங்கியது. அதை தொடர்ந்து, அம்மன் உற்சவர், யானை, யாழி, சிம்மம், சேஷ
வாகனங்களில் திருவீதி உலா வந்தார். நேற்று காலை, குளித்தலை பகுதி மக்கள் சார்பில்,
54ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நடந்தது.



விரதம் இருந்த குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட
பக்தர்கள், குளித்தலை கடம்பர் கோவில் ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு, பஸ் ஸ்டாண்ட், அக்ரஹாரம், பெரிய பாலம், பஜனை மடம் வழியாக சென்று கோவிலை
அடைந்தனர். பின், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Advertisement