சிறப்பு கூறு திட்டம்.. அன்றும் இன்றும்!
- முனைவர் பி.சிவகாமி,
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி,
தொடர்புக்கு: 90438 89769
டாக்டர் அம்பேத்கர், 1940-ம் ஆண்டுகளிலே முன்வைத்த, 'மாநில சோஷலிசம்' என்ற உயரிய கருத்தியலே, இத்திட்டத்தின் அடிப்படை வேராகும். நிலமற்ற தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றுவதே உண்மையான சமூக விடுதலை என்று அவர் நம்பினார்.
நம் நாட்டின் ஐந்தாண்டு திட்டங்கள் தலித் மக்களுக்கு உரிய பலன்களை வழங்காத சூழலில், 1979- - 80ம் ஆண்டு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தின் போது, மத்திய அரசு இச்சிறப்பு கூறு திட்டத்தை முறையாக அறிமுகப்படுத்தியது.
மாநில அரசுகள் தங்களின் மொத்த பட்ஜெட்டில், தாழ்த்தப்பட்ட மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இதன் அடிப்படை விதி. இதில், மக்கள் நேரடியாக பயன் பெறும், 'நேரடி திட்டங்கள்' மற்றும் பொதுவான திட்டங்களில், அவர்களின் பங்கை உறுதி செய்யும் 'மறைமுக திட்டங்கள்' என, இரு வகைகள் உண்டு.
கர்நாடகா மற்றும் மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் நேரடி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்த நிலையில், தமிழகத்தில் தொடக்க காலத்திலிருந்தே இந்த நிதி ஒவ்வொரு துறைக்கும் பிரித்து வழங்கப்பட்டது.
இதனால், கல்வி, விவசாயம், மின்சாரம் போன்ற துறைகளில் நிலவிய கட்டமைப்பு சிக்கல்களால், குறிப்பாக தலித் மக்கள் நிலமற்றவர்களாக இருந்ததால், விவசாயம் மற்றும் நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, அவர்களால் முழுமையாக பயன்படுத்த இயலவில்லை.
உதாரணமாக, தமிழகத்தின் ஐந்தில் ஒரு பங்கு நிதி செலவிடப்படும் மின்சார துறையில், போதிய தொழிற்சாலைகளோ அல்லது லாபம் ஈட்டும் நிறுவனங்களோ இல்லாத காரணத்தால், தலித் மக்களால் தங்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப மின்சாரத்தை பயன்படுத்த முடியவில்லை.
இதனால், இத்திட்டம் தமிழகத்தில் ஒரு மறைமுகமான, விளம்பரப்படுத்தப்படாத திட்டமாகவே பல ஆண்டுகள் நீடித்தது. 2001 முதல் சமூக ஆர்வலர்களும், தலித் அதிகாரிகளும் மேற்கொண்ட தொடர் போராட்டங்களின் விளைவாக, 2006-ல் இது, 'பட்டியல் ஜாதியினர் துணை திட்டம்' என பெயர் மாற்றப்பட்டு, சில மாற்றங்களைக் கண்டது.
இந்த நீண்ட கால போராட்டத்தின் உச்சமாக, 2024ம் ஆண்டு, 'தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மேம்பாட்டு திட்ட சட்டம்' கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் நிதி ஒதுக்கீடு சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்டதுடன், செலவிடப்படாத நிதியை அடுத்த ஆண்டிற்கு அப்படியே கொண்டு செல்லும் முறையும் அமலானது.
இருப்பினும், தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 21,350 கோடி ரூபாய் நிதியில், 45 சதவீத பங்கு மின்சார மானியம் மற்றும் ரேஷன் போன்றவற்றுக்கே ஒதுக்கப்படுகிறது.
குறிப்பாக மின்சார வாரியத்திற்கு இழப்பீடாக வழங்கப்படும் 3,000 கோடி ரூபாய் என்பது மக்களுக்கு நேரடி சொத்தாக மாறாத, ஒரு கணக்கு காட்டும் செலவினமாகவே உள்ளது. அதேபோல, மகளிர் உரிமைத் தொகை போன்ற பொதுவான நலத்திட்டங்களை இத்திட்ட நிதியின் கீழ் செயல்படுத்துவது, இதன் தனித்துவத்தை நீர்த்துப்போகச் செய்கிறது.
இத்திட்டத்தை உண்மையிலேயே வலுப்படுத்த வேண்டுமெனில், மின்சார வாரியத்திற்கு வழங்கும் மானியத்திற்கு பதிலாக, அந்த 3,000 கோடி ரூபாயை ஆதிதிராவிட விவசாயிகளுக்கும், தொழில் முனைவோருக்கும் சூரியசக்தி உபகரணங்களாக வழங்க வேண்டும். இது, அவர்களுக்கு ஒரு நிரந்தர சொத்தாக அமையும்.
மிக முக்கியமாக, இத்திட்ட நிதியில் குறைந்தபட்சம் 15 சதவீதத்தை பயன்படுத்தி, நிலமற்றவர்களுக்கு விளைநிலங்களை வாங்கி தரும், 'நன்னிலம்' போன்ற திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும்.
தனியார் நிலங்கள் விவசாயம் செய்யப்படாமல், பல ஆண்டுகள் பயிரிடப்படாமல் இருக்கும் சூழ்நிலையில், குத்தகைக்கு தலித் விவசாயிகளுக்கு வழங்கி, உற்பத்தியை பெருக்க வழி செய்ய வேண்டும். ஏனெனில் நிலம் இருந்தால் மட்டுமே, கிராமப்புறங்களில் அதிகாரப் பகிர்வும், சமூக கவுரவமும் சாத்தியமாகும்.
மேலும், அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தலித் குடியிருப்புகளில் 100 சதவீதம் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதோடு, ஒவ்வொரு தலித் கிராமத்தையும், ஒரு சிறு விவசாய தொழிற்சாலையாக மாற்ற வேண்டும்.
சுய உதவி குழுக்களுக்கு இந்த தொழிற்சாலைகளில் இடம் வழங்கி, அவர்களுடைய பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும். அந்த அடிப்படை கட்டுமான வசதிக்காக போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
அதேபோல, சிப்காட், சிட்கோ தொழில் வளாகங்களுக்கு நிலம் எடுக்கும் போது, அதிலும் தலித் மக்கள் தொகைக்கு ஈடாக நிலம் ஒதுக்கி, தலித் தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களை உருவாக்க வேண்டும்.
வெறும் சிறு கடன்களுக்கு பதில், தொழில்நுட்ப துறைகளில் தலித் இளைஞர்களை பெரிய தொழில் அதிபர்களாக உருவாக்கும் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
கடந்த கால குறைபாடுகளை கடந்து, நிதியை வெறும் நுகர்வுக்காகவும் பராமரிப்பிற்காகவும் செலவிடாமல், நிலம் மற்றும் தொழில் போன்ற நிரந்தர சொத்துக்களை உருவாக்குவதில் மட்டுமே இத்திட்டத்தின் உண்மையான வெற்றி அடங்கியுள்ளது.
மத்திய மாநில அரசுகள் எவ்வளவுதான் தலித் மக்களுக்காக நன்மைகள் செய்தாலும் கடைசியில் திருமா போன்ற தலைவர்களால் கெட்டு குட்டி சுவராக விடுகிறார்கள்.மேலும்
-
மும்மொழி திட்டத்தை தமிழகம் ஏற்கக்கூடாது
-
பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்
-
அ.தி.மு.க., மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடு ஏதும் இல்லை: சபாநாயகர்
-
ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் வேலை கொடுங்க
-
த.வெ.க., ஆட்சியும் திராவிட ஆட்சி தான்: அடித்து சொல்கிறார் கமல்
-
முதல்வர் விஜய் அமைச்சரவையில் அ.தி.மு.க.,வினருக்கு இடம் உண்டா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்