முன்னாள் அமைச்சர் செம்மலை அதிமுகவில் இருந்து விலகல்

18

சென்னை: இபிஎஸ் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் தங்களின் ஈகோவை கைவிட்டு, கட்சியின் நலனை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

உட்கட்சி பூசலால் திண்டாடி வரும் நிலையில், அதிமுகவில் இருந்து விலகுவதாக முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் பேசியதாவது; எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் காப்பாற்றப்பட்ட இந்த இயக்கம், இன்றைக்கு பலவீனமாகி விட்டதே என்ற கவலை என்னைப் போன்றவர்களுக்கு மட்டுமல்ல, லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு இருப்பதை உணர்கிறேன்.

அதாவது, கட்சி பலவீனமடைந்து கொண்டே செல்கிறேது. அதைப் பலப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுக்கு வேண்டும். ஆனால், இந்த இயக்கத்தில் ஒரு பிரச்னை என்னவென்று சொன்னால், தலைவர்கள், மூத்த தலைவர்களிடையே இருக்கும் 'ஈகோ', கட்சியின் வளர்ச்சியை வேகத்தடை போல தடுத்து வருகிறது. கட்சியை பலப்படுத்தவும், வளர்க்கவும் எண்ணம் இல்லாவிட்டால், இந்தக் கட்சியை அரசியலில் காப்பாற்றுவது மிகவும் கஷ்டமாகி விடும்.

எனக்கு பின்னாலும், இந்தக் கட்சியும், ஆட்சியும் 100 ஆண்டுகள் இருக்கும் ஜெயலலிதா சூளுரைத்ததை, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உணர்ந்தால், இப்படியொரு நிலைமை இந்த இயக்கத்திற்கு இருக்காது. இந்த இயக்கத்தை பொறுத்தவரையில் என்னுடைய அனுபவத்தில் நான் குறையாக காண்பது என்னவென்றால், ஒருமித்த கருத்து, ஆரோக்கியமான கலந்துரையாடல் இல்லாதது தான்.

வேதனை





இதை ஏன் செய்யத் தவறினார்கள் என்று என்னைப் போன்றவர்கள் வேதனையடைகின்றனர். எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி இந்த இயக்கத்தைக் காப்பாற்றி வந்தார்கள் என்பதை இப்போது இருக்கும் அனைத்து மேல்மட்டத் தலைவர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் பல்வேறு வாய்ப்புகளை கொடுத்து அழகு பார்த்தார்கள்.

அதிமுக துவங்கிய காலத்தில் இருந்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பயணித்தவன். எனவே, இந்த இயக்கத்தில் இன்று வேதனையோடு, கனத்த இதயத்தோடு, கட்சியின் பொறுப்பில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுகிறேன் என்று சொன்னால், இரு மாபெரும் ஆளுமைமிக்க தலைவர்களின் ஆன்மாக்களுக்கு என்னுடைய வருத்தத்தை தெரிவித்து, மன்னிப்பு கேட்டுக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

என்னுடைய விலகலுக்குப் பிறகாவது, இந்த இயக்கத்தை கட்டிக் காக்க வேண்டும். காரணம், அதிமுக நிச்சயமாக தமிழக அரசியலிலே நிலையாக இருக்க வேண்டும். அதுதான் தமிழகத்திற்கு நல்லது. அதிமுக இருந்தால் தான் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு. எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சியில் அதிமுகவின் பங்கு அதிகம் என்று மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

ஈகோ





எனவே, பொதுச்செயலாளர் இபிஎஸ் மற்றும் மூத்த தலைவர்கள் தங்களின் ஈகோவை மறந்து, தாங்கள் செய்யத் தவறிய குறைபாடுகளை எல்லாம் நீக்கி, இந்த இயக்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய வேண்டுகோள். இது நடக்க வேண்டும். இது கட்சிக்கும், நாட்டுக்கும் நல்லது. மக்கள் கவலையாக இருக்கின்றனர்.

அதிமுக பிளவு விவகாரத்தில் சதி ஏதும் இல்லை. எங்களுக்குள் ஒற்றுமை இருந்தால் போதும். என்னிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. ஆலோசனை சொல்லும் அளவுக்கு என்னை பெரிய ஆளாக காட்டிக் கொண்டதில்லை. வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் எனக்கு இல்லை.

விஜய் அதிமுகவை ஒரு பொருட்டாக கருதவில்லை என்று சொன்னால், அந்த அளவுக்கு நம் இயக்கத்தை ஓர் அசைக்க முடியாத, வலுவான இயக்கமாக வைத்திருக்க தவறி விட்டோமா? என்று தான் யோசித்துப் பார்க்க வேண்டும்.

பாஜ காரணமல்ல



தவெகவுக்கு ஆதரவு கொடுப்பதாக தெரிவித்த அதிமுகவினர், கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸூடன் அமர்ந்து கலந்து பேசி முடிவெடுத்து இருக்க வேண்டும். அதிமுக பிளவுக்கு பின்னால் பாஜ இருப்பதாக சொல்வதை மறுக்கிறேன்.

எங்களின் தலைமை நிலைய செயலர் எஸ்பி வேலுமணி பாஜவுக்கு நெருக்கமானவர் என்பதையும் ஏற்க மறுக்கிறேன். கூட்டணியில் இருக்கும் கட்சியுடன் கலந்து பேசுவதில் எந்தத் தவறும் இல்லை, இதில், பாஜ சித்து விளையாட்டு விளையாடுவதை எல்லாம் ஏற்க முடியாது. ஒரு தேசிய கட்சி, ஒரு மாநில கட்சியில் ஒரு பிளவை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ள மாட்டார்கள். அதை ஏற்றுக் கொள்ளவும் முடியாது. மத்திய அரசின் துணையோடு, திட்டங்களைப் பெற்று இபிஎஸ் சிறப்பாக ஆட்சி நடத்தினார், இவ்வாறு அவர் கூறினார்.



செம்மலை யார்


செம்மலை 1980ம் ஆண்டு தாரமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1984, 2001, 2016ம் ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டசபைக்கும், 2009ம் ஆண்டு சேலம் லோக்சபா தொகுதியில் இருந்து எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டவர்.

Advertisement