வளர்ச்சி திட்ட பணி: கலெக்டர் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் 56.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் நடைபாதை மற்றும் சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கும் பணி நடக்கிறது.

இந்த பணிகளை, கலெக்டர் ேஷக் அப்துல் ரஹ்மான் நேற்று ஆய்வு செய்து, சிறுவர் பூங்காவில் கூடுதல் நடைபாதை அமைப்பதால் தினந்தோறும் கூடுதலாக பொதுமக்கள் நடைபயிற்சி செய்யவும், சிறுவர்கள் விளையாடவும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.

தொடர்ந்து, விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலக கட்டடம் அருகே உள்ள நகர்ப்புற வாழ்வாதார மையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், அவசர சிகிச்சை அறை, கட்டு கட்டும் அறை, ஊசி போடும் இடம், தாய்மார்கள் பாலுாட்டும் அறை, மருந்து கிடங்கு அறைகளை ஆய்வு செய்தார்.

பின், நகர்ப்புற நலவாழ்வு மைய வளாகத்தில் உள்ள பழைய கூடுதல் கட்டடத்தை அகற்றி 15வது மத்திய நிதிக்குழு மானியம் 2025-26ம் ஆண்டு திட்டத்தின் கீழ் 75 லட்சம் லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதையொட்டி, பழைய கூடுதல் கட்டடம் அகற்றும் பணியையும் பார்வையிட்டார். தொடர்ந்து, பொய்யப்பாக்கம் பாதையில் உள்ள எருமனந்தாங்கல் ஏரியில் 26.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணியையும், காகுப்பம் ஏரியில் 26.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் துார்வாரி, கரையை பலப்படுத்தும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

பணிகள் அனைத்தையும் தரமான முறையில் செய்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி அலுவலர்களிடம் அறிவுறுத்தினார்.

நகராட்சி கமிஷனர் ஷியாமளா, பொறியாளர் புவனேஸ்வரி, மாவட்ட திட்ட அலுவலர் (சுகாதாரம்) பாக்கியலட்சுமி உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Advertisement