செயற்கை நிறமிகளுக்கு மாற்றாக நுண்ணுயிர் நிறமிகள் உருவாக்கம்

2

கோவை: ஆரோக்கியத்திற்கு ஆபத்தான செயற்கை நிறமிகளுக்குப் பதிலாக, உணவுகளில் இயற்கை நிறமிகளைப் பயன்படுத்துவது தொடர்பாக உலகம் முழுவதும் தீவிர ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அந்தவகையில், நுண்ணுயிர் நிறமிகளை உணவுகளில் பயன்படுத்துவது குறித்து அண்ணா பல்கலை கோவை மண்டல வளாக உயிர்தொழில்நுட்பத் துறையில் முக்கிய ஆய்வுகள் நடக்கின்றன.

அதில், உயிர் தொழில்நுட்ப துறை உதவி பேராசிரியர் ரேணுகா தேவி மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.ரேணுகாவிடம் பேசினோம்:

பல வண்ணங்களில் நிறமிகளை உமிழும் பாக்டீரியா நுண்ணுயிர்களை எங்கள் மண்டல வளாக சுற்றுச்சூழலில் கண்டறிந்துள்ளோம். மஞ்சள், ஊதா, பச்சை, ஆரஞ்சு போன்ற வண்ணங்களில் நிறமிகளை கொண்ட பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பாக்டீரியாவிலிருந்து நிறமிகள் பிரித்தெடுக்கப்பட்டு, அவற்றை உணவுகளில் பயன்படுத்தும் போது ஏதாவது நச்சுத்தன்மை ஏற்படுகிறதா, வண்ணங்கள் எவ்வளவு நாட்களுக்கு நிலைத்து நிற்கின்றன போன்ற அம்சங்கள் குறித்து ஆய்வு செய்கிறோம்.

செயற்கை நிறிமிகளுக்கு மாற்றாக இந்நுண்ணுயிர் நிறிமிகள் உணவுகளுக்கு இயற்கையான நிறத்தை அளிப்பதுடன், எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. மேலும், தாவரவியல் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து தேவையான நிறமிகளை பெறுவது சவாலானது.

சாதகமான சூழ்நிலையில், ஒரு பாக்டீரியம் இரண்டாகப் பிளவுபட்டு தனது எண்ணிக்கையை சில மணி நேரத்தில் பன்மடங்கு பெருக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவை. இதன்வாயிலாக, தேவைக்கேற்ப பாக்டீரியாக்களை வேகமாக பெருக்கி, குறைந்த நேரத்தில் நிறமிகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.

இத்துடன், 3டி உணவு அச்சுப்பொறி தொழில்நுட்பம் வாயிலாக, தாவரவியல் சார்ந்த புரதங்களுக்கு மதிப்புக்கூட்டும் ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். புரதங்களை வெறும் பவுடராக இல்லாமல், வெவ்வெறு வடிவங்களில், வண்ணங்களில் உருவாக்க முடியும்.

Advertisement