கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரிய போகிறது: அதிபர் டிரம்ப்

25

வாஷிங்டன்: நாங்கள் மேற்காசிய போரை மிக விரைவில் முடிவுக்கு கொண்டு வர போகிறோம்; கச்சா எண்ணெய் விலை அதலபாதாளத்திற்குச் சரிய போகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


இது குறித்து நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது: நாங்கள் போரை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவரப் போகிறோம். அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த தீவிரத்துடன் உள்ளனர்.

கச்சா எண்ணெய் விலைகள் அதலபாதாளத்திற்குச் சரிவதை நீங்கள் காணப்போகிறீர்கள். அவை நிச்சயம் குறையப் போகின்றன. அங்கு மிக அதிக அளவில் கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது; எனவே, அவற்றின் விலைகள் கடுமையாக சரியும்.

ஈரான் மீது தாக்குதல் நடத்துவதா? வேண்டாமா என்று முடிவெடுப்பதற்கு ஒரு மணி நேரம் மட்டுமே இருந்தது. நாங்கள் அனைவரும் தயாராக இருந்தோம். ஆனால் சில நாட்டு தலைவர்கள் போரை நிறுத்துமாறு கேட்டு கொண்டதால் தற்போது தாக்குதலை ஒத்திவைத்து உள்ளேன்.

ஈரான் ஒரு ஒப்பந்தம் மேற்கொள்ள நான் ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் அளிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அணு ஆயுதம் வைத்திருப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. ஈரான் அணு ஆயுதங்கள் வைத்து இருந்தால் இஸ்ரேலைத் தகர்த்துவிடுவார்கள். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Advertisement