மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயன்ற எம்எல்ஏ முஸ்தபா; பக்தர்கள் கொந்தளிப்பு

67

நமது நிருபர்



சனாதனத்தை ஒழிப்போம் என்று வெளிப்படையாகவே பேசி வரும் தவெக எம்எல்ஏ முஸ்தபா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைய முயற்சி செய்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா. இவர் சில நாட்களுக்கு முன் சனாதனத்தை ஒழிக்க தான் நாங்கள் வந்து இருக்கிறோம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது பேச்சு அனைவரது மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நடை அடைத்த பிறகு உள்ளே செல்ல முயற்சி செய்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நடை சாத்தியப்பிறகு யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்தனர்.

அவர் தான் இந்த தொகுதியின் எம்எல்ஏ என்று கூறி, கோவிலில் நடக்கும் கும்பாபிஷேக திருப்பணிகளை பார்க்க வந்ததாக கூறி உள்ளே நுழைய முயன்றார். ஆனால் போலீசார் கறாராக அனுமதி இல்லை என்று கூறி விட்டனர். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துவிட்டு முஸ்தபா அங்கு இருந்து கிளம்பிவிட்டார்.

கண்டனம்



இது குறித்து பாஜவினர் கூறியதாவது: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் முஸ்தபா 8 பேருடன் செல்ல முயற்சி செய்து இருக்கிறார். அவர் இந்த கோவில் மீது நம்பிக்கை இருக்கிறது என்று பிரமாண பத்திரம் கையெழுத்து போட்டு கொடுத்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்று அறநிலையத்துறை விதிமுறைகள் இருக்கிறது. அதன்படி விதிமுறை படி சொன்னாலும் முஸ்தபாவை அனுமதிக்க கூடாது.

அவர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பதால் அந்த கோவிலுக்கு ஓனர் ஆகிவிட முடியாது. சனாதனத்தை ஒழிக்க தான் ஆட்சிக்கே வந்து இருக்கிறோம் என்று பேசிய இந்த நபர் வந்து உள்ளே செல்வதற்கு அறநிலையத்துறையும், போலீசாரும் அனுமதிக்க கூடாது. இந்த விஷயத்தில் தனது கருத்தை முதல்வர் விஜய் வெளிப்படையாக சொல்ல வேண்டும்.

இவ்வாறு பாஜவினர் தெரிவித்தனர்.

Advertisement