பாகூர் அருகே கொட்டகை எரிந்து 6 ஆடு, 26 கோழிகள் உயிரிழப்பு

பாகூர்: பாகூர் அருகே கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், 6 ஆடுகள், 26 கோழிகள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகூர் அடுத்த பின்னாச்சிக்குப்பம் சிவகிரி நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன், 42; பாண்லே ஊழியர். வீட்டில் ஆடு, மாடு, கோழிகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சல் முடித்து வீடு திரும்பிய ஆடு, கோழிகளை கொட்டகையில் அடைத்து வைத்தார். நள்ளிரவு 12:30 மணியளவில் திடீரென கொட்டகை தீப்பிடித்து எரிந்தது. உள்ளே இருந்து வைக்கோல் கட்டுகளும் தீ பற்றி கொழுந்து விட்டு எரிந்துள்ளது. அதனை கண்ட, கார்த்திகேயன், மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர்.

தகவலறிந்த பாகூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைத்தனர்.  இருப்பினும் கொட்டகையில் இருந்த 6 ஆடுகள், 26 கோழிகள் தீயில் எரிந்து பரிதாபமாக இறந்தன. மேலும், ஒரு பைக்கும் தீயில் கருகியது.  மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொட்டகையின் வெளியே மாடுகள் கட்டப்பட்டு இருந்ததால், அவை அதிஷ்டவசமாக உயிர் தப்பின.

இச்சம்பவம் குறித்து கன்னியக்கோவில் வருவாய் ஆய்வாளர் தமிழ் அமுதன், சேலியமேடு கிராம நிர்வாக அதிகாரி அனந்தராமன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement