இந்த இக்கட்டான சூழலில் இருந்து மக்களை யாராலும் காப்பாற்ற முடியாது; சொல்கிறார் ராகுல்

12

ரேபரேலி: தற்போது வீசப்போகும் பொருளாதாரப் புயலில் இருந்து மக்களை பிரதமராலோ, அரசாங்கத்தாலோ காப்பாற்ற முடியாது என்று உத்தபிரதேசத்தில் நடந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது; இந்திய பொருளாதார அமைப்பை பிரதமர் மோடி விற்றுவிட்டார். இந்தியாவின் பொருளாதாரத்தை அம்பானி, அதானி மற்றும் அமெரிக்காவிடம் அவர் ஒப்படைத்துவிட்டார். இப்போது ஒரு பொருளாதாரப் புயல் வீசப்போகிறது. அதிலிருந்து உங்களை பிரதமர் மோடியாலோ அல்லது இந்திய அரசாங்கத்தாலோ காப்பாற்ற முடியாது. இது எங்கள் தவறு அல்ல என்று சொல்லி அழுவார்கள். ஆனால் நான் சொல்கிறேன். பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ் மீதுதான் தவறு உள்ளது. ஏனெனில் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தை அழித்துவிட்டார்கள்.

தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல் அல்லது காஸ் தட்டுப்பாடு இல்லை என்று சொல்லப்பட்டது. பெட்ரோல் விலை உயராது என்றும் கூறப்பட்டது. இன்று பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், அம்பானி ரஷ்யாவிலிருந்து பெட்ரோலை வாங்கி வெளிநாடுகளுக்கு விற்கிறார். அந்தப் பணத்தில் இருந்து பிரதமர் மோடிக்கு நிதி அளிக்கிறார்கள். இதுதான் உண்மை.

நாட்டு மக்களை வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம், தங்கம் வாங்க வேண்டாம், மின்சார வாகனங்களை வாங்குங்கள் என்று பிரதமர் மோடி கூறுகிறார். வரும் காலங்களில் விவசாயிகளுக்கு உரம் கிடைக்காது. இன்னும் சில மாதங்களில் பணவீக்கம் அதிகரிக்கும். பெட்ரோல், டீசல், எண்ணெய், காஸ், பருப்பு மற்றும் அரிசி விலைகள் கிடுகிடுவென உயரும். தங்கம் வாங்க வேண்டாம், வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என்று வெளிப்படையாக சொன்ன பிரதமர் மோடி, பல கோடி ரூபாய் மதிப்பிலான விமானங்களில் வெளிநாடுகளுக்குச் செல்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement