திருக்கழுக்குன்றத்தில் வடிகால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், புனரமைக்கப்பட்டுள்ள குளத்தின் நீர்வரத்து வடிகால்வாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்துள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், திருக்கழுக்குன்றம் மலைக்குன்று வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. அதன் தென்மேற்கில் உள்ள, பக்தவச்சலேஸ்வரர் கோவில் அருகில், தேரடியை ஒட்டி லட்சுமிதீர்த்த குளம் உள்ளது.

இக்குளம், வருவாய்த்துறை ஆவணங்களில், தேரடி குளம் என்று பதியப்பட்டுள்ளது. கோவில் நிர்வாக கட்டுப்பாட்டில் குளம் உள்ளதாக கூறப்படும் நிலையில், நீண்டகாலமாக பராமரிக்கப்படவில்லை.

இவற்றின் நான்குபுறமும் ஆக்கிரமிப்புகளால் துார்ந்து, புதர் சூழ்ந்து சீரழிந்தது. இச்சூழலில், பேரூராட்சி நிர்வாகம், கடந்த ஆண்டு குளத்தை துார்வாரி மேம்படுத்தியது.

சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர், குளத்தை அடையும் வகையில், மலைக்குன்று கோவில் அடிவாரம், பொதுநுாலக பகுதியிலிருந்து, சன்னதி தெரு வழியாக, 300 மீ., நீளத்தில் வடிகால்வாய் அமைக்கப்பட்டன.

குளத்தை துார்வாரி பராமரித்து வந்தாலும், வடிகால்வாய்களை மீட்க பேரூராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் மழைநீர் குளத்தில் சேர்ந்து, சுற்றுபுற பகுதி நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

இந்நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று முன்தினம் வேதகிரீஸ்வரர் கோவில் குளத்தை பார்வையிட்டார்.

அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் படியும், வடிகால்வாய்களை சீரமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisement