வேலுமணி கோஷ்டி எம்எல்ஏக்கள் 5 பேர் இபிஎஸ்க்கு ஆதரவு

22

சென்னை: தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்காத நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார் உள்ளிட்ட 5 எம்எல்ஏக்கள் மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளனர்.

சட்ட சபை தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுகவில் இபிஎஸ் மற்றும் சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி ஆகியோர் அடங்கிய அணி என்று இரண்டாக பிளவு பட்டது. திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க இபிஎஸ் முயன்றதாக குற்றம்சாட்டிய எஸ்பி வேலுமணி அணி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்தது.

இதையடுத்து, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரின் கட்சி பொறுப்புகளை பறித்து இபிஎஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் மாவட்ட செயலாளர்களை அழைத்து தனது பலத்தையும் நிரூபித்தார்.

இதனிடையே, அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று சிவி சண்முகம் தரப்பு எதிர்பார்த்து இருந்ததாக கூறப்படும் நிலையில், விசிக, கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் கட்சிகளின் நிபந்தனைகளால் அது நடக்காமல் போனது. இது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.


இந்த நிலையில், எஸ்பி வேலுமணி தரப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்த ஆற்காடு எம்எல்ஏ சுகுமார், மீண்டும் இபிஎஸ் அணிக்கு தாவியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்ஸை வீட்டில் சென்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.



தொடர்ந்து, எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் மேலும் மூவர் இபிஎஸ்க்கு ஆதரவு அளித்துள்ளனர். சுகுமாரை தொடர்ந்து பண்ரூட்டி எம்எல்ஏ மோகன், அந்தியூர் எம்எல்ஏ ஹரிபாஸ்கர், சங்கரன்கோவில் எம்எல்ஏ திலீபன், காங்கேயம் எம்எல்ஏ நடராஜ் ஆகியோர் அணி மாறினர்.

இது சிவி சண்முகம் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது.

Advertisement