நடுவக்கரையில் அரைகுறையாக போடப்பட்ட சிமென்ட் சாலை

திருக்கழுக்குன்றம், மே 21–

நடுவக்கரை ஊராட்சியில் விடுபட்ட பகுதியில் புதிய சாலை அமைக்கவும், சேதமடைந்த சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கழுக்குன்றம் அருகே நடுவக்கரை ஊராட்சி உள்ளது. இங்கு 1,000த்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கருமாரப்பாக்கம், முத்துமாரியம்மன் கோவில் தெரு மற்றும் போத்தியம்மன் கோவில் தெருவில் மட்டும் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், முத்துமாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை அரைகுறையாக உள்ளது. ஊராட்சி நிர்வாகம் அலட்சியத்துடன் சாலை பணியை மே ற்கொண்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

அதேபோல போத்தியம்மன் கோவில் தெருவில் சிமெண்ட் சாலை சேதமடைந்துள்ளது. மழைகாலங்களில் சாலையில் இருந்து வழியும் மழைநீர் விடுபட்ட பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், முதியவர்கள், குழந்தைகள் நடப்பதற்கும், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதற்கும், சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, விடுபட்ட இடத்தில் புதிய சாலை, அமைக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement