பாகிஸ்தான் பயங்கரவாதி போல் பேசுகிறார்: ராகுலுக்கு பா.ஜ., கண்டனம்

3

புதுடில்லி: 'பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை துரோகிகள் என விமர்சித்துள்ளது, ராகுலின் அராஜக மனப்பான்மையை காட்டுகிறது' என, பா.ஜ., கண்டனம் தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் சமீபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி., யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல், 'பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா இருவரும் நாட்டை விற்ற துரோகிகள்.

'அரசியலமைப்பு சட்டத்தின் மீதும், தேசிய சின்னங்களின் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள்' என, குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துஉள்ளது.

அக்கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின் தன் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி மற்றும் அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிரான ராகுலின் கருத்துகள் துரதிருஷ்ட மானவை. இது, ராகுலின் அராஜக மனப்பான்மையை யும், குணநலன்களை யும் தெளிவாக பிரதிபலிக்கிறது.

தேர்தல்களில் அவரது காங்கிரஸ் கட்சி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருவதால் ஏற்பட்ட விரக்தியையும், ஏமாற்றத்தையும் இந்த கருத்துகள் வெளிப்படுத்துகின்றன. ராகுல், தன் சமநிலையை இழந்து வருகிறார்.

ராகுலின் பேச்சு, நாட்டில் உள்ள 140 கோடி மக்களுக்கும் இழைக்கப்பட்ட அவமானம். இதற்காக, நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், 'பிரதமர் மோடியின் கீழ், இந்தியா ஒற்றுமையுடன் இருப்பதை கண்டு எரிச்சலும், கோபமும் அடைந்த ஒரு நகர்ப்புற நக்சலின் மொழியை ராகுல் பயன்படுத்தி உள்ளார்.

'அவரின் பேச்சு, பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மொழி நடையை ஒத்துள்ளது. இந்திய எதிர்ப்பு சக்திகளின் உருவமாக ராகுல் உள்ளார்' என, தெரிவித்து உள்ளார்.

Advertisement