காரைக்குடியில் பலத்த மழை கார் மீது விழுந்த மரங்கள்

காரைக்குடி: காரைக்குடியில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் மரங்கள், பிளக்ஸ் பேனர் சாய்ந்து கார்கள் மீது விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடியுடன் கனமழை பெய்தது. இதில் டி.டி நகரில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. அருகில் நின்று கொண்டிருந்த காரின் மீது மரம் விழுந்ததால் கார் சேதமானது. இதேபோல் செக்காலை சாலையில் உள்ள தியேட்டர் முன்பு வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் சாய்ந்து சாலையில் விழுந்தது. சாலையோரம் நின்ற காரின் மீது பிளக்ஸ் பேனர் விழுந்ததோடு போக்குவரத்தும் பாதிப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பலத்த காற்று காரணமாக நீண்ட நேரம் மின்சாரம் தடைபட்டது.

Advertisement