சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க ஆலோசனை

மூணாறு;சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க ஊராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

சுற்றுலா நகரான மூணாறுக்கு தினமும் நூற்றுக் கணக்கில் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குப்பை, உணவு கழிவுகள் உள்பட பல்வேறு கழிவுகளை நினைத்த இடத்தில் வீசி விட்டு செல்கின்றனர். அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகம் பெரும் தொகையை செலவிட்டு வருகிறது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்க மூணாறு ஊராட்சி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

அதற்கு வசதியாக கொச்சி, தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறு போலீஸ் ஸ்டேஷன் அருகிலும், பழைய மூணாறு பகுதியிலும், உடுமலைபேட்டை ரோட்டில் பெரியவாரை ரோட்டிலும் பசுமை செக்போஸ்ட்டுகள் அமைக்கப்படுகின்றன. நுழைவு கட்டணம் வசூலிப்பதுடன் பயணிகள் குப்பை உள்ளிட்ட கழிவுகளை திறந்த வெளியில் வீசி விடாமல் தடுக்கும் வகையில் பைகள் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. அவற்றில் பயணிகள் குப்பைகளை சேகரித்து மீண்டும் செக்போஸ்ட்டுகளில் வழங்க வேண்டும்.

கட்டணம் உள்பட செக்போஸ்ட்டுகள் அமைப்பது குறித்து ஊராட்சி மன்ற குழுவில் முடிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூணாறு அருகே காந்தலூர் ஊராட்சியில் கோவில்கடவில், அந்த ஊராட்சி சார்பில் செக்போஸ்ட் அமைக்கப்பட்டு வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சிறிய ரக வாகனங்களுக்கு ரூ.30, பெரிய ரக வாகனங்களுக்கு ரூ. 100 வசூலிக்கின்றனர்.

Advertisement