அதிகரிப்பு இளநீர் ஏற்றுமதி குறைந்ததால் தேங்காய் வரத்து தேங்காய் விலை குறைவால் விவசாயிகள் பாதிப்பு
ஆண்டிபட்டி, மே 22-
இளநீர் ஏற்றுமதி குறைந்ததால் தேனி மாவட்டத்தில் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. தேங்காய் விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிப்படைகின்றனர்.
தேனி மாவட்டத்தில் வருஷநாடு, கடமலைக்குண்டு, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம், போடி, பெரியகுளம் பகுதிகளில் 9ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுபடி அதிகம் உள்ளன.
மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் இளநீர், பாட்டில்களில் அடைக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட ஏஜென்சி மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இளநீர் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. வரத்து அதிகரிப்பால் தேங்காய் மார்க்கெட்டில் நிலையற்ற விலை விவசாயிகள், வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது. உரித்த தேங்காய் சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.70 ல் இருந்து படிப்படியாக குறைந்து தற்போது கிலோ ரூ.40 விலையில் உள்ளது. கோடை காலத்தில் தென்னை விளைச்சல் வழக்கமான நாட்களை விட கூடுதலாக இருக்கும். வியாபார நோக்கத்தில் குத்தகைதாரர்கள் வியாபாரிகள் விவசாயிகளிடம் முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்து விடுவர். மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள விலை குறைவு தற்போது பலருக்கும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
தேங்காய் வியாபாரிகள் கூறியதாவது: தேனி மாவட்டத்திலிருந்து தினமும் 600 டன் தேங்காய் காங்கேயம் மார்க்கெட் அனுப்பப்படுகிறது. அங்கிருந்து இந்தியா முழுவதும் வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த சில மாதங்களாக இளநீர் ஏற்றுமதியில் ஏற்பட்ட பாதிப்பால் தேங்காய் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த நவம்பரில் சில்லரை விலையில் ரூ.30 ஆக இருந்த ஒரு தேங்காய் விலை தற்போது ரூ.15 வரை குறைந்துள்ளது. விலை உயரும் என்ற நம்பிக்கையில் தேங்காய்களை நீண்ட நாட்கள் இருப்பில் வைக்கவும் முடியாது. பருப்பு விலையும் கடந்த சில மாதங்களில் கிலோ ரூ.250ல் இருந்து ரூ.135 வரை குறைந்துள்ளது. இருப்பில் உள்ள தேங்காய்களை லாபம் இன்றி விற்பனை செய்தால் போதும் என்ற நிலைக்கு விவசாயிகள் வியாபாரிகள் தள்ளப்பட்டுள்ளனர் இவ்வாறு கூறினர்.