அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகும் வெளியாட்கள்

கோவை:ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் அருகே இருப்பதால், வெளியூர்களில் இருந்து வரும் சிலர், கோவை அரசு மருத்துவமனையில் தஞ்சம் புகுவதால், பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனை 18 ஏக்கர் பரப்பளவில், 36 துறைகளுடன் இயங்கி வருகிறது. இங்கே தினசரி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள், வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. உள்நோயாளிகளை பார்க்க வருவோர், அவசர சிகிச்சை பிரிவு, பிரேத பரிசோதனை என, தினசரி 15 ஆயிரம் பேர் இவ்வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.

இவர்களுக்கு மருத்துவமனை முன்புறம் இரு நுழைவாயில்களும், அரசு கலைக்கல்லுாரி செல்லும் வழியில் ஒரு நுழைவாயிலும் உள்ளது. வளாகத்தை சுற்றி 300 கேமராக்கள் உள்ளன. இருப்பினும் கடந்த மாதம் ஒரு டாக்டர் உட்பட மூன்று பேரின் இருசக்கர வாகனம் திருடு போனது. வளாகத்தில் உள்ள சலவையகத்தின் கதவின் பூட்டை, யாரோ கல்லால் உடைக்க முயன்றதாக வீடியோ வெளியானது. அவரை போலீசில் ஒப்படைத்தும் மறுநாள் காலையும், கல்லுடன் வந்துள்ளார்.

நேற்று முந்தினம், ஜெய்கா கட்டடத்தின் ஓரத்தில் ஒருவர் அமர்ந்து திடீரென கத்தி கொண்டிருந்தார். பிறகு, சிடி ஸ்கேன் எடுக்கும் இடத்தில், நோயாளிகளுடன் சிறிது நேரம் அமர்ந்த இவர் மீண்டும் கத்த ஆரம்பித்தார். போதை ஆசாமிகள் சிலர் சுற்றி கொண்டிருப்பதையும் பார்க்க முடிந்தது.

சிகிச்சைக்கு வந்த பெண்மணி ஒருவர் கூறுகையில்,''அம்மாவுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால், ஒருவாரமாக இங்கே தங்கியுள்ளேன். இரவில் சிலர் தனியாக சுற்றி கொண்டிருப்பதும், கண்ட இடங்களில் துாங்குவதையும் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது. நர்ஸ்களிடம் தெரிவித்தால், நோயாளிக்கு துணை எனக்கூறி இப்படித்தான் பலர் தங்குவதாக கூறுகின்றனர்' என்றார்.

ஆர்.எம்.ஓ. சரவண பிரியாவிடம் கேட்டதற்கு,'' வளாகத்தில் தற்போது ரோடு போடும் பணிகள் நடப்பதால், அனைத்து நுழைவாயிலும் திறந்திருக்கிறது. அதனால், வெளியாட்கள் உள்ளே வருவதை கண்காணிக்க சிரமம் ஏற்படுகிறது. அம்மா உணவகம் இருப்பதோடு, சில தன்னார்வலர்கள் உணவு வழங்குகின்றனர். அதை சாப்பிட்டுவிட்டு இங்கே தங்குவதாக தெரிகிறது. போலீசாரிடம் பேசியுள்ளோம்'' என்றார்.

Advertisement