மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி; அத்துமீறிய போலீசுக்கு சரியான தண்டனை

26

நமது நிருபர்



மதம் மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்ட பெண்ணுக்கு அநீதி தாக்குதல் நடத்திய ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கர்நாடகாவைச் சேர்ந்தவர் சுகன்யா, 33. இவர், 10 ஆண்டுகளுக்கு முன், சென்னைக்கு வந்து வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் உள்ள கடையில் பணிபுரிந்தார். அப்போது, அதே வணிக வளாகத்தில் மற்றொரு கடையில் பணிபுரிந்த சூளைமேடைச் சேர்ந்த சையது இப்ராஹிம், 33, என்பவருடன் சுகன்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறியது.

அப்போது சையது இப்ராஹிம், நம் திருமணம் நடக்க வேண்டும் என்றால், ஹிந்து மதத்தில் இருந்து முஸ்லிமாக மாற வேண்டும் என, வற்புறுத்தி உள்ளார். இதையடுத்து எட்டு ஆண்டு காதலுக்காக, சுகன்யா மதம் மாறி, சபா மரியம் என பெயர் மாற்றிக் கொண்டார். இதனால், சுகன்யாவின் பெற்றோர் அவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

இந்நிலையில், சையது இப்ராஹிம் சுகன்யாவிடம் பழகுவதை தவிர்த்து, ஏமாற்றி வந்துள்ளார். இதையறிந்த சுகன்யா, கடந்த 6ம் தேதி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதை தொடர்ந்து, கடந்த 15ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், சுகன்யா புகார் அளித்தார். சையது இப்ராஹிமுக்கு, வேறொரு பெண்ணுடன் திருமணம் நடந்தது.

இதையறிந்த சுகன்யா, நண்பர்களுடன் அங்கு சென்று, தனக்கு நீதி வேண்டும், சையது இப்ராஹிம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி கல்யாண நிகழ்ச்சியின் வரவேற்பு மேடையில் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது சுகன்யாவிற்கு ஆதரவாக வந்த தோழியை, இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி தகாத வார்த்தையால் திட்டவே, அப்பெண் 'உன், காக்கி சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்' எனக் கூறினார்.

மேலும், தட்டிக்கேட்ட ஒருவருக்கு இன்ஸ்பெக்டர் சிதம்பர பாரதி குத்துவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தற்போது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் பாரதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இது அத்துமீறும் போலீசுக்கு சரியான தண்டனை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement