ராஜிவ் நினைவு நாள் கவர்னர் மரியாதை

புதுச்சேரி: முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவு நாள், தேசிய வன்முறை எதிர்ப்பு நாளாக புதுச்சேரி அரசு சார்பில் நேற்று அனுசரிக்கப்பட்டது.

ராஜிவ் சதுக்கத்தில் உள்ள சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  எம்.எல்.ஏ.,க்கள் ராஜவேலு, சாய் சரவணன் குமார், சிவகொழுந்து, ஆறுமுகம், அழகானந்தம், நாராயணசாமி, ரவிக்குமார், தலைமைச் செயலர் சரத் சவுகான், செய்தி மற்றும் விளம்பரத் துறையின் இயக்குனர் சுரேஷ்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், அனைவரும் வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, காங்., சார்பில் எம்.பி., வைத்திலிங்கம், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, முன்னாள் துணை சபாநாயகர் பாலன், முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் எம்.எல்.ஏ., வைத்தியநாதன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து, மக்கள் மாளிகையில் வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. கவர்னர் முன்மொழிய மக்கள் மாளிகை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர். துணை நிலை ஆளுநரின் செயலர் உடன் இருந்தார்.

இதேபோல்,  தலைமைச் செயலகத்தில் வன்முறை எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தலைமைச் செயலர், வன்முறை எதிர்ப்பு தின உறுதி மொழியை வாசிக்க அரசு செயலர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.

Advertisement