விசைப் படகுகள் கள ஆய்வு கணக்கெடுக்கும் பணி

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள விசைப்படகுகளை, கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி நடந்தது.

மத்திய அரசின் மீன்வள அமைச்சகத்தின் உத்தரவு படி, அனைத்து கடலோர பகுதி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தற்பொழுது நடைமுறையிலுள்ள மீன்பிடி தடை காலத்திற்குள், அனைத்து பதிவு பெற்ற, பதிவு பெறாத மீன்பிடி படகுகளை, கள ஆய்வு செய்து, அதற்கேற்றாற் போல் இணையதள பக்கத்தை புதுப்பித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.  அதனடிப்படையில், முதற்கட்டமாக புதுச்சேரி தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகம் மற்றும் உப்பளம் துறைமுகத்தில் உள்ள விசைப் படகுகளை, கள ஆய்வு செய்து கணக்கெடுக்கும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.

இப்பணியை, மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில், இணை இயக்குனர் தெய்வசிகாமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். துணை இயக்குனர் கோவிந்தசாமி மேற்பார்வையில், உதவி ஆய்வாளர்கள் அடங்கிய 8 குழுக்களை சேர்ந்த அதிகாரிகள் படகுகளை கள ஆய்வு செய்தனர்.  ஆய்வின்போது, படகிற்கான பதிவு எண்,  படகு சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களான பதிவு சான்றிதழ், மீன்பிடி உரிம சான்றிதழ், மானிய டீசல் புத்தகம், காப்பீட்டு ஆவணம் போன்றவற்றை பார்வையிட்டனர்.

விசைபடகில் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம், ஜி.பி.எஸ்., வி.ஹச்.எப்., கருவிகள், படகின் நீள அளவுகள் சரிபார்க்கப்பட்டது. குறைகளை சுட்டிக்காட்டி அதிகாரிகள், உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க விசைப்படகு உரிமையாளர்களிடம் அறிவுறுத்தினர்.  

Advertisement