தனியார் துறை வளர்ச்சி மே மாதத்தில் சிறிய சரிவு
புதுடில்லி: நாட்டின் தனியார் துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் மே மாதத்தில் சற்றே மந்தமடைந்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் 'பிளாஷ் இந்தியா கூட்டு பி.எம்.ஐ.,' அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையின் விபரம்:
தயாரிப்பு, சேவைகள் துறையின் வளர்ச்சியை குறிக்கும் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, மே மாதத்தில் 58.10 புள்ளிகளாக சற்றே குறைந்துள்ளது. இது ஏப்ரலில் 58.20 புள்ளிகளாக இருந்தது. எனினும், 50 புள்ளிகளுக்கு மேல் உள்ளதால் தொடர்ந்து 58 மாதங்களாக வளர்ச்சி நீடிக்கிறது.
இம்மாதம் தயாரிப்பு துறையைவிட சேவைத்துறை சிறப்பான பங்களிப்பை தந்துள்ளது. தயாரிப்பு துறை பி.எம்.ஐ., 54.70ல் இருந்து 54.30 புள்ளிகளாக குறைந்துள்ள நிலையில், சேவைத்துறை குறியீடு 58.80ல் இருந்து 58.90 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
மேற்காசிய போர் சூழலால் புதிய ஆர்டர்கள் குறைந்துள்ளன. ஏற்றுமதி ஆர்டர்கள் 19 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளன. எரிபொருள், மூலப்பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
தயாரிப்பு துறையில் உள்ளீட்டு செலவுகள் உயர்ந்தாலும், நிறுவனங்கள் விற்பனை விலையை சிறிதளவே உயர்த்தியுள்ளன. பணியமர்த்தல்களை பொறுத்தவரை, சேவைத்துறையில் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தயாரிப்பு துறையில் வேலைவாய்ப்பு ஏப்ரலை விட குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.