அன்னுார் அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படாத முதல்வர் உத்தரவு

அன்னுார்: அரசு அலுவலகங்களுக்கு வரும் பொது மக்களை இருக்கையில் அமர வைத்து, கோரிக்கைகள் குறித்து கேட்க வேண்டும் என தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் அறிவுறுத்தினார்.

இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை உள்ளிட்ட சில துறை உயரதிகாரிகள், தங்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு இதுகுறித்து சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.

எனினும் அன்னுார் தாலுகாவில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் அதிகாரிகளுக்கு எதிரே இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படவில்லை.

தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் இருக்கைக்கு எதிரே பொதுமக்களுக்கு இருக்கைகள் போடப்பட்டுள்ளன. ஆனால் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோரை சந்திக்கும் மக்கள் நின்றபடியே தங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் தெரிவிக்க வேண்டியுள்ளது. இதே போல் தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நில அளவை துறையிலும் சர்வேயர்களை சந்திக்கும் பொதுமக்கள் நின்றபடியே தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவிக்க வேண்டி உள்ளது.

சார் பதிவாளர் அலுவலகத்தில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட பத்திரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இங்கும் சார் பதிவாளர் இருக்கைக்கு எதிரே இருக்கைகள் போடப்படவில்லை.

பொதுமக்கள் நின்றபடியே பத்திரப்பதிவு ஆவணங்களில் கையெழுத்திடுகின்றனர். பார்வையாளர்கள் பகுதியில் அதிக அளவு இருக்கைகள் போடப்பட்டு உள்ளன.

அன்னுார் தாலுகாவில் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் முதல்வர் உத்தரவிட்டு நான்கு நாட்கள் ஆகியும் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கைகள் போடப்படவில்லை.

Advertisement