அமைச்சர்கள் பேச்சை அதிகாரிகள் கேட்பது இல்லை பங்கார்பேட்டை எம்.எல்.ஏ., நாராயணசாமி விரக்தி

பெங்களூரு: ''பல்வேறு துறைகளில் அமைச்சர்களின் பேச்சை, அதிகாரிகள் கேட்பது இல்லை. அதற்கு முதல்வர் பதவி குழப்பமே, காரணமாக உள்ளது. இந்த குழப்பத்தை கட்சி மேலிடம் விரைந்து சரி செய்ய வேண்டும்,'' என, பங்கார்பேட்டை காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாராயணசாமி வலியுறுத்தினார்.

பெங்களூரின், விதான் சவுதாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் பதவி விஷயத்தில், இந்த அளவுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்க கூடாது. மாநில மக்கள் அதிக தொகுதிகளில், காங்கிரசை வெற்றி பெற வைத்து, பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர்.

ஆனால் முதல்வர் பதவிக்காக, குழப்பம் ஏற்படுவது சரியல்ல.

அரசுக்கு இரண்டரை ஆண்டு நிறைவடைந்தவுடன், அமைச்சரவையை மாற்றியமைத்து, சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கியிருக்க வேண்டும். அதை செய்திருந்தால், அனைத்தும் சரியாகி இருக்கும்.

முதல்வர் பதவிக்காக நடக்கும் குழப்பங்களை பற்றி, மக்கள் பேசுகின்றனர். இந்த பிரச்னைக்கு, விரைந்து தீர்வு காண வேண்டும்.

சித்தராமையா, முதல்வர் பதவியில் நீட்டிக்கட்டும் அல்லது அவரை மாற்றி, வேறு யாரையாவது முதல்வர் பதவியில் அமர்த்தட்டும்.

எந்த முடிவாக இருந்தாலும், விரைந்து எடுக்க வேண்டும். ஆட்சி நிர்வகிப்புக்கு அதுதான் நல்லது. பல்வேறு துறைகளில் அமைச்சர்களின் பேச்சை, அதிகாரிகள் கேட்பது இல்லை. அதற்கு முதல்வர் பதவி குழப்பமே, காரணமாக உள்ளது.

அமைச்சரவையை மாற்றி அமைப்பதில், முதல்வர் சித்தராமையா ஆர்வம் காட்டுகிறார். அவரது வருகைக்காக சித்தராமையா காத்திருக்கிறார். ராகுல் வந்த பின், முதல்வரும், நுணை முதல்வரும் டில்லிக்கு சென்று ராகுலையும், மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்திப்பர். அப்போது நாங்களும் மேலிடத்தை சந்திக்க, டில்லிக்கு செல்வோம்.

தற்போது மூன்று அமைச்சர் இடங்கள், காலியாக உள்ளன. அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், 15 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நானும் கூட அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறேன்.

கோலார் மாவட்டத்தில் நான் மூத்தவன். கட்சி மேலிடம் இதை கவனித்து, அமைச்சர் பதவி வழங்கும் என, நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement