ஆபத்தான நிலையில் சுற்றுச்சுவர் புதுப்பிக்க எம்.எல்.ஏ., நடவடிக்கை

தங்கவயல்: தங்கவயல் அரசு மருத்துவமனையின் பின்புறம் சேதமடைந்த சுற்றுச்சுவர் கட்டடத்தை புதுப்பிக்க, தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தார்.

ராபர்ட்சன்பேட்டை அரசு பொது மருத்துவமனையின் பின்புறத்தில், சஞ்சய்காந்தி நகர் பகுதியை ஒட்டியுள்ள சுற்றுச்சுவர் 200 அடி நீளமுள்ளது. இந்த சுற்றுச்சுவர் தற்போது மிகவும் சேதமடைந்துள்ளது. எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இது குறித்து, சஞ்சய் காந்தி நகர் மக்கள் மற்றும் மருத்துவமனையின், தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் சுரேஷ்குமார், ஆகியோர் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். நேற்று அவர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, சுற்றுச்சுவரின் நிலையை ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

இந்த சுற்றுச்சுவர் மிகவும் பழமையானது. மோசமான நிலையில் இருப்பது குறித்து பல நாட்களுக்கு முன்பே என் கவனத்திற்கு வந்தது. பழைய சுற்றுச்சுவரை இடித்து அகற்றி, புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிக்கான டெண்டர் செயல் முறை ஏற்கனவே தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தில் உள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்படும்.

மழைக்காலம் தொடங்க உள்ளதால், அருகில் வசிப்போர், குறிப்பாக, குழந்தைகள், சுற்றுச்சுவரின் அருகே செல்லாமல் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Advertisement