இனியாவது மத்திய அரசுடன் இணக்கம் காட்டுமா தமிழகம்?

10

சென்னை: தமிழகத்திற்கு இணையாக அனைத்து மாவட்டங்களிலும் உள்கட்டமைப்பு வசதி இல்லாத நிலையிலும், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால், ஆந்திரா தொழில் முதலீடுகளை அதிகளவில் ஈர்த்து வருகிறது.

எனவே, தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க, முந்தைய தி.மு.க., ஆட்சி போல, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், முதல்வர் விஜய் அரசு இணக்கமாக செயல்பட வேண்டும் என, தொழில் துறை அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, தமிழக அரசின் தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நெடுஞ்சாலை இணைப்பு வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் நன்கு உள்ளன. சென்னை, எண்ணுார், துாத்துக்குடி உள்ளிட்ட முக்கிய துறைமுகங்களும், சென்னை, திருச்சி, மதுரை, துாத்துக்குடி, சேலத்தில் விமான நிலையங்களும் உள்ளன.

இன்ஜினியரிங் பட்டதாரிகளும், திறன்மிக்க பணியாளர்களும் அதிகம் உள்ளனர். குறிப்பாக, ஆண்களுக்கு இணையாக பெண்களும் பல துறைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாட்டில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில், 42 சதவீதத்துடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

ஆந்திராவில் முதலீடு 'கூகுள்' நிறுவனம், செயற்கை நுண்ணறிவு மற்றும், 'டேட்டா' மையத்தை தமிழகத்தில் அமைக்க, முந்தைய தி.மு.க., அரசுடன் பேச்சு நடத்தியது. 'ஏசி' சாதனங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள 'கேரியர்' நிறுவனம், எல்.ஜி., எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களுடன், தமிழக அதிகாரிகள் பேச்சு நடத்திய நிலையில், அவை கடந்த ஆண்டில் ஆந்திராவில் முதலீடு செய்தன.

மோதல் போக்கு



தமிழகத்தில், 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி ஆலை அமைக்க, அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த, 'ஹ்வாஸுங்' நிறுவனமும், முதலீட்டை ஆந்திராவுக்கு மாற்றியது.

டி.ஆர்.டி.ஓ., எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கீழ் செயல்படும் விமான மேம்பாட்டு முகமை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில், நம் நாட்டில் அதிநவீன போர் விமானங்கள் தயாரிக்க, போர் விமான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பட்ட விமான சோதனை மையம் அமைக்க இருப்பதை அறிந்து, தமிழக அதிகாரிகள் மூன்று ஆண்டுகளாக பேச்சு நடத்தி வந்தனர்.

ஓசூரில் இலவசமாக நிலம் வழங்குவதாகவும் தெரிவித்தனர். திடீரென அந்த மையத்தை, ஆந்திராவின் புட்டபர்த்தியில் அமைக்க, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சமீபத்தில் அடிக்கல் நாட்டினர்.

'செமி கண்டக்டர்' உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சில நிறுவனங்களும், தமிழகத்தில் முதலீடு செய்ய வந்த நிலையில், உ.பி., உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு சென்று விட்டன.

இப்படி தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டிய பல தொழில் நிறுவனங்களுடன், தொழில் துறை அதிகாரிகள் பல முயற்சிகளை மேற்கொண்டாலும், கடைசியில் அந்த முதலீடுகள் வராமல் போய் விட்டன. இதற்கு, முந்தைய தி.மு.க., அரசு, மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்தது முக்கிய காரணம்.

மத்திய அரசின் தவறுகளையும், மாநில உரிமைகளுக்கு எதிரான விஷயங்களையும் எதிர்க்கலாம். ஆனால், மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை தீவிரமாக கடைப்பிடிப்பது, முதலீட்டாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுகிறது.

அரசுடன் இணக்கம்



மத்திய அரசின் பல்வேறு துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளும் தமிழக அதிகாரிகளுக்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், ராணுவம், வான்வெளி, எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில், மத்திய அரசின் அனுமதி, ஊக்குவிப்பு சலுகைகளை, நிறுவனங்கள் பெற வேண்டியுள்ளது.

இதனால், பிற மாநில மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள், தமிழகத்தில் உள்ள தங்களின் பிரதிநிதிகள் வாயிலாக, மத்திய அரசுடனான தமிழக அரசின் மோதல் போக்கை தெரிந்து கொண்டு, தமிழகத்தில் தொழில் முதலீடு செய்யாமல், ஆந்திராவுக்கு சென்று விட்டன.

தமிழகத்துடன் ஒப்பிடும்போது, ஆந்திராவில் பல மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாகவே உள்ளன. அப்படி இருந்தும் அம்மாநிலம், பல்வேறு தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கு, மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதே காரணம்.

எனவே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, முந்தைய தி.மு.க., ஆட்சி போல் இல்லாமல், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement