மா.செ., கூட்டத்தை மீண்டும் கூட்டும் பழனிசாமி; பங்கேற்காவிட்டால் பதவியை பறிக்கவும் திட்டம்

சென்னை: மாவட்ட செயலர் கூட்டத்தை, மீண்டும் கூட்ட, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.

தொடர் தோல்வியால், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் சண்முகம் தலைமையில் 25 எம்.எல்.ஏ.,க்கள் அணி திரண்டு உள்ளனர். கட்சியின் பொதுக்குழுவை கூட்டி, தொடர் தோல்வி குறித்து விவாதிக்க வேண்டும் என, அந்த அணி போர்க்கொடி துாக்கி உள்ளது.

இதையடுத்து, தன் ஆதரவை பிரகடனப்படுத்த, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டத்தை, சென்னையில் கடந்த 19ம் தேதி பழனிசாமி கூட்டினார். அந்த கூட்டத்துக்கு, 20 மாவட்ட செயலர்களும், 43 அமைப்பு செயலர்களும் வரவில்லை. எனினும், பெரம்பலுார் மாவட்ட செயலர் தமிழ்செல்வனின் பதவியை மட்டும் பழனிசாமி பறித்தார்.

இந்நிலையில், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம் கிடைக்காமல், சண்முகம் அணி கலகலத்து போய் உள்ளது. இதை தனக்கு சாதகமாக்க நினைக்கும் பழனிசாமி, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களிடமும் தொலைபேசியில் பேசி வருகிறார். சண்முகம், வேலுமணி தரப்பு, அடுத்த திட்டம் போடுவதற்கு முன், கட்சியை தன் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

அதன்படி, மீண்டும் மாவட்ட செயலர் கூட்டத்தை கூட்ட திட்டமிட்டுள்ளார். அந்த கூட்டத்துக்கு, மாநில நிர்வாகிகள், அணி செயலர்களையும் அழைக்க முடிவெடுத்து உள்ளார்.

இந்த கூட்டத்துக்கு வராத நிர்வாகிகளை அடையாளம் கண்டு, அவர்களின் பதவியை பறிக்கவும் பழனிசாமி முடிவெடுத்துள்ளார் என, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.

@block_B@

சட்டசபை செயலருடன் அ.தி.மு.க.,வினர் சந்திப்பு



த.வெ.க., அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்த அ.தி.மு.க., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்குமாறு பழனிசாமி தரப்பில் ஏற்கனவே சபாநபாயகரிடமும், கவர்னரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பழனிசாமி அணி கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி நேற்று சட்டசபை செயலரை சந்தித்து, புதிய மனு ஒன்றை அளித்தார்.

அதில், 'எங்கள் தரப்புக்கு கூடுதல் எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. எதிரணியின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அவர்களின் கோரிக்கையை நிராகரித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, பலமிக்க எங்களின் தரப்பை அங்கீகரிக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, வேலுமணி, சண்முகம் தரப்பினரும் சட்டசபை செயலரை சந்தித்து மனு அளித்தனர். தங்கள் தரப்பு கோரிக்கையை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.block_B

Advertisement