அறுபத்து மூவர் நாயன்மார்கள் ஊர்வலம்

சிதம்பரம்: அறுபத்து மூவர் நாயன்மார்கள் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்றனர்.

சிதம்பரம், நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் வைகாசி விசாகம் மற்றும் சேக்கிழார் குருபூஜை விழாக்களின் போது அறுபத்து மூன்று நாயன்மார்களின் வீதியுலா நடை பெறுவது வழக்கம்.

இதையொட்டி, நேற்று முன்தினம் , சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து 63 நாயன்மார்களை அடியார்கள் சுமந்து, ஊர்வலம் புறப்பட்டனர்.

முன்னதாக கோவில் யானை வலம் வர ஊர்வலம் துவங்கியது. நடராஜர் கோவிலை சுற்றியுள்ள முக்கிய நான்கு வீதிகளிலும், ஆயிரக்கணக்கான சிவனடியார்கள் பங்கேற்று, அறுபத்து மூன்று நாயன்மார்களின் திருமேனிகளை சுமந்து வீதியுலா சென்றனர்.

தொடர்ந்து சித்சபை முன்பு சேக்கிழார் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனார் எழுந்தருளச் செய்து சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

Advertisement