'யு டியூப்' வீடியோவால் ஆந்திராவில் வீசுது... அரசியல் புயல்!ஜெகனை கைது செய்ய அமித் ஷாவிடம் கோரினாரா பவன்?

- நமது சிறப்பு நிருபர் -: ஆந்திராவில், இடதுசாரி சிந்தனையுடைய பிரபல அரசியல் ஆய்வாளரான பேராசிரியர் கே.நாகேஸ்வர் வெளியிட்ட வீடியோ ஒன்று, அம்மாநில அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் துணை முதல்வர் பவன் கல்யாண் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி - ஜனசேனா கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2019 - 24 மே வரை, ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்தார்.

கடந்த 2024 மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் வென்றதை அடுத்து, தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வரானார். பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண், துணை முதல்வரானார்.

ஜெகன் மோகன் ஆட்சியின் போது, பவன் கல்யாண் சுதந்திரமாக நடமாடவோ, பிரசாரம் செய்யவோ முடியாத அளவிற்கு கடுமையான நெருக்கடிகளை சந்தித்தார். இதனால், ஜெகன் மோகன் மீது அவருக்கு தனிப்பட்ட பகை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரம் கைக்கு வந்துள்ள நிலையில், ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்பதில், துணை முதல்வர் பவன் கல்யாண் கறாராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கான நேரத்தை எதிர்பார்த்து அவர் காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த சூழலில், தெலுங்கானா, ஆந்திரா என இரு மாநிலங்களிலும் நன்கு அறியப்பட்டவரும், இடதுசாரி சிந்தனையுடைய பிரபல அரசியல் ஆய்வாளருமான கே.நாகேஸ்வர், சமீபத்தில், தன், 'யு - டியூப்' சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்த வீடியோவில் அவர் தெரிவித்த கருத்துக்கள் தான், தற்போது ஆந்திர அரசியலில் புயலை கிளப்பி உள்ளன.

வீடியோவில், கே.நாகேஸ்வர் கூறியதாவது:

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், அவரது நம்பிக்கைக்குரியவரும், மாநில நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான நரேந்திர மனோகர் ஆகியோர், டில்லியில், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சமீபத்தில் சந்தித்து பேசினர்.

அப்போது, ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த அமித் ஷா, 'ஜெகன் மோகன் ரெட்டியிடம் பகைமை காட்ட வேண்டாம். கொஞ்சம் அமைதியாக இருங்கள்' என, பவன் கல்யாணிடம் கூறினார்.

மேலும், சந்திரபாபு நாயுடு பா.ஜ.,வுக்கு திடீர் நண்பர் என்றும், ஆனால், ஜெகன் மோகன் ரெட்டி, நீண்ட கால நண்பர் என்றும் அமித் ஷா குறிப்பிட்டார். இந்த தகவலை, ஜனசேனா கட்சியின் முக்கிய பிரமுகர் என்னிடம் பகிர்ந்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் காரணமாகவே, ஜெகன் மோகன் ரெட்டி மீதான விமர்சனங்களை துணை முதல்வர் பவன் கல்யாண் குறைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. பேராசிரியர் கே.நாகேஸ்வரின் இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த ஒய்.எஸ்.ஆர்.காங்., நிர்வாகிகள், 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஆளும் கூட்டணி ஈடுபடுகிறது. பேராசிரியர் கே.நாகேஸ்வரின் கருத்துக்கள் மூலம் அக்கூட்டணியின் சூழ்ச்சிகள் அம்பலமாகிவிட்டன' என்றனர்.

இச்சம்பவத்துக்கு ஆளும் கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பேராசிரியர் கே.நாகேஸ்வர் மீது மாநிலத்தின் பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, தனக்கு தவறான தகவல் வழங்கப்பட்டதாகவும், அதை சரிபார்க்க தவறிவிட்டதாகவும் கூறி, தன் கருத்தை பேராசிரியர் கே.நாகேஸ்வர் திரும்ப பெற்றார். எனினும், இந்த விவகாரம் ஆந்திர அரசியலில் மேலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Advertisement