47 நாட்கள் முன் மாயமான மாணவர்; மும்பை வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சோகம்

2

மும்பை: மஹாராஷ்டிராவில் மாயமான மாணவர் 47 நாட்கள் கழித்து மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மும்பை வீதிகளில் அவர் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தது தான் இதில் உச்சபட்ச சோகம்.

இதுபற்றிய விவரம் வருமாறு;

நான்தேட் பகுதியைச் சேர்ந்தவர் அபய் சுரேஷ் பெல்கானி(25). இவர் ஹோமியோபதி மருத்துவம் படித்து வருகிறார். 3ம் ஆண்டு மாணவரான இவர் ஏப்.4ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார்.

ரயிலில் அவர் கல்லூரிக்குச் செல்லும் போது தமது செல்போன், பை உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளார். கையில் பணம் இல்லாத சூழலில் பசியும் வாட்டியெடுக்க வேறு வழியின்றி மும்பை வீதிகளில் பிச்சை எடுக்க ஆரம்பித்து இருக்கிறார்.

ஏப்.6ம் தேதி வியாபாரி ஒருவரின் செல்போனை பயன்படுத்தி, குடும்பத்தாரை தொடர்பு கொண்டுள்ளார். தனது நிலையை விளக்கி கூறுவதற்குள் இணைப்பு துண்டிக்கப்பட, அதன் பின்னர் அபய்சுரேஷ் பெல்கானியை பல இடங்களில் தேடிய அவர்கள், மே 16ம் தேதி போலீசை அணுகி உள்ளனர்.

இதையடுத்து, தீவிரமாக தேடி வந்த போலீசார், அவர் மும்பை வீதிகளில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்து குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தெளிவான மனநிலை இல்லாத சூழலில் அபய் சுரேஷ் பெல்கானி இருந்துள்ளார். இருப்பினும் தனது பெயர், சொந்த ஊரை பகிர்ந்து கொண்டதால் கண்டுபிடிக்க முடிந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Advertisement