உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்; ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம்

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

தங்கள் நாட்டு மீது 'ஓரேஷ்னிக்' ஏவுகணையைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று கூறியிருந்தார். எனவே, நாட்டு மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில்,உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரஷ்யா மிகப்பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர், 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட அதிநவீன 'ஓரேஷ்னிக்' ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதை ரஷ்யா உறுதிப்படுத்தியது. 4 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போரில் இந்த அதிநவீன ஆயுதம் பயன்படுத்தப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்தத் தாக்குதல் குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,'ரஷ்யப் பகுதியில் உள்ள பொதுமக்களின் உள்கட்டமைப்புகள் மீது உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகள் ஓரேஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,",இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்தத் தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லேயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை;உக்ரைன் மீது ரஷ்யா நடத்தியுள்ள கொடூரமான தாக்குதல், மிருகத்தனத்தையும், மனித உயிர்கள் மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீதான அலட்சியத்தையும் காட்டுகிறது.பொதுமக்களுக்கு எதிரான பயங்கரவாதம் என்பது பலம் அல்ல. அது அவர்களின் விரக்தியையே காட்டுகிறது.

உக்ரைனின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கூடுதல் உதவிகளுடன், நாங்கள் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்கிறோம், இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement