இதே நாளில் அன்று

மே 25, 1925

திருச்சி மாவட்டம், பொய்யாமணி கிராமத்தில், நமசிவாயம் - மாரியம்மாள் தம்பதியின் மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் ந.மா.முத்துக்கூத்தன்.

சிறு வயதிலேயே கவிதைகள் இயற்றுவது, நடிப்பதில் ஆர்வமாக இருந்த இவர், கே.ஆர்.ராமசாமியின் கிருஷ்ணன் நாடக சபா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர்., நாடக மன்றம் உள்ளிட்டவற்றில் நகைச்சுவை வேடங்களில் நடித்தார்.

பின், பராசக்தி, ரத்தக்கண்ணீர், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதிய பூமி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, அரச கட்டளை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களுக்கு வசனம், பாடல்களை எழுதினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் வாயிலாக, தென்மாவட்டங்களில் பிரபலமாக இருந்த வில்லுப்பாட்டு கலையை கற்றார்.

வில்லுப்பாட்டு மூலம், வட மாவட்டங்களில் குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 'பாதை மாறாத பாட்டு பயணம், தமிழிசை பாடல்கள், பகை வென்ற சோழன்' உள்ளிட்ட நுால்களை எழுதிய இவர், தன் 80வது வயதில், 2005, மே 1ல் மறைந்தார்.

இவரது பிறந்த தினம் இன்று!

Advertisement