மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு!
'நம்ம லாண்ட்ரி' என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி தரும், கோவையை சேர்ந்த செவித்திறன் குறைவு மாற்றுத்திறனாளியான, 65 வயதாகும் கே.முரளி:
வாழ்க்கையில் பல சவால்களை கடந்து தான், இந்த இடத்திற்கு வந்துள்ளேன். சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த நான், ஓராண்டுக்கு முன் கோவையில், 'நம்ம லாண்ட்ரி' என்ற பெயரில் தொழில் முயற்சியை துவக்கினேன். தற்போது, இரண்டாவது கிளையை துவக்கி உள்ளேன்.
இந்த இரண்டு கிளைகளிலும் சேர்த்து, செவித்திறன் மாற்றுத்திறனாளிகள் ஏழு பேர் வேலை செய்கின்றனர். சலவை செய்வது, இஸ்திரி போடுவது உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் இவர்களே மேற்கொள்கின்றனர்.
இந்த முயற்சியின் நோக்கம், லாபம் மட்டும் அல்ல; அவர்களுக்கு தன்னம்பிக்கை அளித்து, தங்கள் சொந்தக் காலில் நிற்க உதவ வேண்டும் என்பதே முக்கிய குறிக்கோள். எங்களிடம் உள்ள துணி துவைக்கும் இயந்திரங்கள் சில, தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் கிடைத்தவை.
ஆரம்பத்தில், தொழிலில் பல சவால்கள் இருந்தன. மக்களை தேடிச் சென்று, எங்களுடைய சேவைகளை எடுத்துச் சொல்லி தொழிலை வளர்த்தோம்.
தற்போது மாதம், 1 லட்சம் ரூபாய் வரை வருமானம் வருகிறது. மேலும் பல இடங்களில், புதிய கிளைகளை துவக்கவும் திட்டமிட்டுள்ளோம். இதுதவிர, 2004ல் நிறுவப்பட்ட, 'டெப் லீடர்ஸ் பவுண்டேஷன்' என்ற அமைப்பின் நிறுவன இயக்குநராகவும் செயல்பட்டு வருகிறேன். இந்த அமைப்பு செவித்திறன், விழித்திறன் மாற்றுத்திறனாளிகளின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்துகிறது.
இந்த அமைப்பின் வாயிலாக, 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க செய்துள்ளேன். மேலும், செவித்திறன் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்காக தலைமைத்துவ பயிற்சிகள், தொழில் முனைவோர் பயிற்சிகள் மற்றும் சுயதொழில் திட்டங்களையும் நடத்தி வருகிறேன்.
'டெப் இந்தியா நியூஸ்' என்ற, 'யூ டியூப்' சேனலையும் நடத்தி வருகிறேன். இதற்கு, 56,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உள்ளனர். கல்வி மற்றும் விழிப்புணர்வு சார்ந்த வீடியோக்களை, செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் புரியும் வகையில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். இதற்காக, பல விருதுகளையும் பெற்றுள்ளேன்.
என் ஊழியர்கள் மட்டுமல்ல, வேறு யாரேனும் தொழில் துவங்கும் யோசனையுடன் என்னை அணுகினால், அவர்களுக்கு வழிகாட்டி வருகிறேன். இதுபோன்ற முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கும்போது, இது இன்னும் விரிவடைந்து, பலரின் வாழ்க்கையை மாற்றும் வாய்ப்பு உள்ளது.
தொடர்புக்கு:
98439 26374
மேலும்
-
காஷ்மீர் பல இடங்களில் என்ஐஏ சோதனை; பயங்கரவாத அமைப்புக்கு எதிராக நடவடிக்கை
-
2 குடும்பத்திற்கு போலீசார் உதவிக்கரம்
-
புளியமரக்கிளை விழுந்து மின் கம்பங்கள் உடைப்பு
-
இட நெருக்கடியில் திணறும் திருப்போரூர் தபால் நிலையம்
-
செங்கையின் 1,164 ஏரிகளில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி
-
ஏரியில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி பலி