அதிகரிப்பு

டிஜிட்டல் பேனர் கலாசாரம்... கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர் கலாசாரம் அதிகரித்து வருவதை அதிகாரிகள் கவனித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசியல் பிரமுகர்களின் திருமணம், காதுகுத்து, வளைகாப்பு உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் கட்சி சார்ந்த கூட்டத்திற்கு பங்கேற்க வருகை தரும் முக்கிய நிர்வாகிகளை வரவேற்கும் விதமாக கட்சி நிர்வாகிகள் பெரிய அளவிலான டிஜிட்டல் பேனர்களை வைக்கின்றனர்.

டிஜிட்டல் பேனர் வைக்க அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ளது. அதாவது, பேனர் வைப்பவர்கள் இடத்தின் உரிமையாளரிடம் அனுமதி பெற வேண்டும்.

பொதுஇடங்கள் மற்றும் சாலையோரத்தில் வைக்க வேண்டுமெனில் துறை சார்ந்த அலுவலர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற்று, அதை போலீசாரிடம் வழங்க வேண்டும். அங்கு பேனரின் அளவு, எத்தனை நாட்கள் வைக்கப்படும், என்ன நிகழ்ச்சிக்காக வைக்கப்படுகிறது, மோதல் ஏற்படும் விதமான வாசகங்கள் உள்ளதா என்பதை டிஜிட்டல் பேனர் வைப்பவர்கள் தெளிவு படுத்த வேண்டும். தொடர்ந்து போலீசாரிடம் அனுமதி பெற்ற கடிதத்தை வருவாய்த் துறையினரிடம் சமர்ப்பித்து, அனுமதி கிடைத்த பிறகு பேனர் வைக்க வேண்டும்.

ஆனால், இந்த நடைமுறையை பின்பற்றாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களாலும், அலங்கார வளைவுகளாலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

கிராமப்புற திருவிழாக்களில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக, மோதல் ஏற்படும் வகையிலான வாசகங்களை கொண்ட பேனர்கள் வைக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் மழை பெய்யும் போது பலத்த காற்று வீசுகிறது.

அப்போது, டிஜிட்டல் பேனர்கள் காற்றில் தள்ளாடுவதை காண முடிகிறது. பலத்த காற்று வீசும் பட்சத்தில் பேனர்கள் சாலையில் செல்பவர்கள் மீது சாய்ந்து, கொடுங்காயங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

அசாம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு, சர்ச்சைக்குள்ளாகும் போது மட்டும் பேனர் வைப்பதை தவிர்க்குமாறு அரசியல் கட்சி தலைவர்கள் அறிவுரை வழங்குகின்றனர். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் டிஜிட்டர் பேனர் கலாசாரம் அதிகரிக்கிறது.

எனவே, விபத்து ஏற்படும் முன் பேனர்களை வைப்பதில் அரசின் விதிமுறைகள் பின்பற்றவும், கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement