செம்மஞ்சேரியில் விரிசல் விழுந்த சாலை ஒரு மாதமாகியும் சீரமைக்காததால் அவதி
செம்மஞ்சேரி: செம்மஞ்சேரியில் மூடு கால்வாய், குடிநீர், கழிவுநீர் கால்வாய் பணியால் விரிசல் விழுந்த சாலையை, ஒரு மாதமாகியும் சீரமைக்காததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.
ஓ.எம்.ஆரில் இருந்து பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் நோக்கி செல்லும் நுாக்கம்பாளையம் இணைப்பு சாலை, 80 அடி அகலம் கொண்டது. இந்த சாலையில், மெட்ரோ ரயில் பணித்தளம், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. பேருந்து சாலையானதால், குடிநீர், கழிவுநீர் அதிகளவு செல்கின்றன.
கடந்த ஆண்டு முதல், இந்த சாலையில் 10 அடி அகல மூடு கால்வாய், குடிநீர், கழிவுநீர் கால்வாய் திட்ட பிரதான குழாய் பதிப்பு போன்ற பணிகள் நடந்து வருகின்றன.
மாநகராட்சி, குடிநீர் வாரியம் ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்தனியாக செய்கின்றனர். இதனால், சாலை மிகவும் மோசமாக மாறி உள்ளது. சில இடங்களில், 150, 200 அடி நீளம் வீதம் சாலையில் விரிசல் விழுந்துள்ளது.
ஒரு வழி பாதையான அதில், பணிகள் நடப்பதால் இருவழி வாகனங்களும் செல்கின்றன.
அதனால், அதிக அளவில் அழுத்தம் ஏற்பட்டு விரிசல் அதிகரித்துள்ளது. இதனால், சாலை உள்வாங்கி சரிந்து விழும் அச்சத்தில் வாகன ஓட்டிகள் உள்ளனர்.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது:
இரு துறைகளும் திட்டமிட்டு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணி செய்யவில்லை. ஒரு மாதத்திற்கு முன், சிறிய அளவில் விழுந்த விரிசல், தற்போது அதிகரித்துள்ளது.
இருப்பினும், அதை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இரண்டு துறைகளும் ஒருவரை ஒருவர் கைகாட்டி, பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர்.
சாலை உள்வாங்கினால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். அருகில் மாற்று சாலையும் இல்லை. இதை உணர்ந்து, சாலை விரிசலை சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.