அரைகுறை மழைநீர் வடிகால்வாய் பணி கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு

ராயபுரம்: ராயபுரம் அரசு மருத்துவமனை எதிரே, மந்தகதியில் நடக்கும் மழைநீர் வடிகால்வாய் பணியால், கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

ராயபுரம், கல்லறைச் சாலையில் மழைநீர் வடிகால்வாய் பணி, சில மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது. தேர்தல் என்பதால் பணிகள் நடக்கவில்லை. தேர்தல் முடிந்தும், வடிகால்வாய் கட்டுமான பணி வேகமெடுக்காமல் மந்தகதியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில், மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரே, ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

இதனால் கர்ப்பிணியர், பச்சிளம் குழந்தைகளுக்கு, மர்ம காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், கடும் துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதியை மூக்கை மூடியபடி கடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, வடிகால்வாய் பணிகளை விரைந்து முடித்து, கழிவுநீர் தேங்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement