சேதமடைந்த சமுதாயக்கூடங்களை அகற்ற , ஏழைகள் பயன் பெற புதியதாக கட்டுவதற்கு எதிர்பார்ப்பு
சாத்துார்: விருதுநகர் மாவட்டத்தில் ஊராட்சிகளில் சேதமடைந்த சமுதாய கூடங்களை அகற்றிவிட்டு புதிய சமுதாய கூடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழைகள் எதிர்பார்க்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ஊராட்சிகள் நிறைந்த பகுதி. நகர் பகுதியை விட ஊராட்சியில் வசிக்கும் மக்கள் அதிக அளவில் உள்ளனர். பெரும்பான்மையான ஊராட்சிகளில் கடந்த ஆட்சிக் காலங்களில் திருமணம், சடங்கு, என பல்வேறு வீட்டு விசேஷங்களை கிராமத்தில் வசிக்கும் மக்கள் அப்பகுதியில் கட்டித் தரப்பட்ட சமுதாயக்கூடங்களில் வைத்து நடத்துவது வழக்கம்.
இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கட்டணம் இல்லாமல் தங்கள் வீட்டு விசேஷங்களை அந்தந்த பகுதி ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடங் களிலேயே நடத்திக் கொள்ள வசதியாக இருந்தது. விவசாய கூலி தொழிலாளர்கள் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் என பல்வேறு பொருளாதாரப் பிரிவை சார்ந்த மக்களும் சமுதாய கூடத்தை பயன்படுத்தி பலன் அடைந்து வந்தனர்.
தற்போது இந்த சமுதாயக்கூடங்கள் தொடர்ந்து பராமரிக்கப்படாமல் போனதால் கட்டடங்களில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்து இடியும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஊராட்சி பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு மண்டப வசதியின்றி தனியார் மண்டபங்களை வாடகைக்கு பிடித்து அதில் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்தும் நிலை உள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை கூலி தொழிலாளர்கள் மண்டபங்களை வாடகைக்கு பிடிக்க முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான ஊராட்சி பகுதிகளில் சமுதாயக் கூடங்கள் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆவதால் இந்த கட்டடங்கள் மேற்கூரை சேதமடைந்து தரைதளம் பெயர்ந்தும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் காணப்படுகிறது.
சேதமடைந்த சமுதாய கூடங்களை சமூக விரோதிகள் மது குடிக்கும் பாராகவும் புகை பிடிக்கும் இடமாகவும் பயன்படுத்தி வருகின்றனர். பாழடைந்து இடியும் நிலையில் உள்ள சமுதாயக் கூடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய சமுதாயக்கூடங்களை கட்டித் தருவதன் மூலம் ஊராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் வீட்டு விசேஷங்களை நடத்துவதற்கு வழி பிறக்கும் மேலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதும் குறையும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.