மரங்கள் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
மேட்டூர்: மேட்டூரில் நேற்று முன்தினம் இரவு சூறை காற்றுடன், 56.8 மி.மீ., மழை பெய்தது. இதனால், பவானி-தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், மேட்டூர் சீத்தாமலையில் இரு வளைவுகளில் ஒரு கருவேலமரம், ஒரு வேப்பமரம் வேரோடு சாலையில் சாய்ந்தது. ஒரு பாறையும் சாலையில் விழுந்தது.
தகவல் அறிந்த மேட்டூர் தீயணைப்பு, மீட்பு குழுவினர், 12 பேர் நிலைய அலுவலர் வெங்கடேசன் தலைமையில், சாலை குறுக்கே கிடந்த மரங்களை வெட்டி அகற்றினர். மரங்கள் அகற்றப்பட்டதால், 3 மணி நேரத்துக்கு பின்பு மீண்டும் சீத்தாமலை சாலையில் கார், வேன் போக்குவரத்து துவங்கியது.
* ஆத்துார் சுற்றுவட்டார பகுதிகளில், நேற்று முன்தினம், சூறாவளி காற்றுடன் கன மழை கொட்டி தீர்த்தது. இதில் ராமநாயக்கன்பாளையம், 10 ஏக்கர் காலனி, கொத்தாம்பாடி, காமராஜர் நகர் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் அடியோடு முறிந்து விழுந்தன. மேலும், ஐந்து ஏக்கருக்கு மேல் வாழை, மக்காச்சோளம் பயிர்களும் சேதமடைந்தது. இதில் சரசு என்பவரது வீட்டின் மீது புளிய மரம் விழுந்து, வீடு சேதமடைந்ததில், மூதாட்டி உயிர் தப்பினார். இரண்டு மாட்டு கொட்டகை, குடியிருப்பு வீடு சேதமானது. சூறாவளி காற்றில், 10 மின் கம்பங்கள் உடைந்ததால், அவற்றை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சேதமடைந்த பயிர்கள் மற்றும் வீடுகளுக்கு, இழப்பீடு வழங்கிட வேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.