செங்கல் சூளையில் மாமூல் கேட்ட த.வெ.க., நிர்வாகி நீக்கம்

சென்னை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், மாமூல் கேட்டு மிரட்டிய தமிழக வெற்றிக் கழக நிர்வாகி, கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆளுங்கட்சியான த.வெ.க.,வின், ராணிப்பேட்டை மாவட்டம் கணியம்பாடி கிழக்கு ஒன்றிய செயலராக இருந்தவர் விஜயகுமார்.

இவர், அப்பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், மாமூல் கேட்டு மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 'சூளை தொடர்ந்து இயங்க வேண்டும் என்றால், மாதம் ௧ லட்சம் ரூபாய் மாமூல் தர வேண்டும்' என மிரட்டிய 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவியது.

அவரை கண்டித்து, செங்கல் சூளை உரிமையாளர்களும், தொழிலாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, விஜயகுமாரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக, த.வெ.க., ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலர் விஜய் மோகன் அறிவித்துள்ளார்.

Advertisement