5 விரைவு ரயில்களுக்கு திருவள்ளூரில் நிறுத்தம்

திருவள்ளூர்;சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் செல்லும் 5 விரைவு ரயில்கள், திருவள்ளூரில் தற்காலிகமாக நின்று செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

அரக்கோணம் ரயில் நிலையத்தில், மேம்பாட்டு பணி மற்றும் புளியமங்கலம் - அரக்கோணம் இடையே, 3 மற்றும் 4வது ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இதனால், பல விரைவு ரயில்கள் காட்பாடியுடனும், சென்னையில் இருந்து வரும் சில புறநகர் மின்சார ரயில்கள் திருவாலங்காடு வரையும் மட்டுமே இயக்கப்பட உள்ளன.

இதனால், சென்னை - திருவள்ளூர் இடையே உள்ள பகுதிகளைச் சேர்ந்த விரைவு ரயிலில் பயணம் செய்வோர், அரக்கோணம் செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, அரக்கோணம் ரயில் நிலைய மேம்பாட்டு பணி நிறைவடையும் வரை, விரைவு ரயில்கள் சிலவற்றை, திருவள்ளூரில் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய அனுமதிக்க வேண்டும் என, தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு, பயணியர் வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்ற ரயில்வே துறை, சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக செல்லும் பெங்களூரு பிருந்தாவன், காச்சிகுடா, மும்பை, வெஸ்ட் கோஸ்ட் மற்றும் ஹூப்ளி ஆகிய 5 விரைவு ரயில்கள், நாளை முதல் வரும் 20ம் தேதி வரை, ஒரு மார்க்கத்தில் மட்டும் திருவள்ளூரில் நின்று செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement