கொசு உற்பத்தி தடுப்பு நடவடிக்கை கண்காணிப்பில் நகராட்சி ஊழியர்கள்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில், நகராட்சி ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளில் பயன்பாட்டில் உள்ள மற்றும் பயன்பாடற்ற பொருட்களில், நன்னீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பெருகி வருகின்றன. இதன் காரணமாக, ‘டெங்கு, சிக்குன்குனியா’ போன்ற நோய்கள் பரவி, மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதை தவிர்க்க, ஆட்டுக்கல், தேங்காய் ஓடு, பிளாஸ்டிக் குவளை, பிளாஸ்டிக் வாளி, குளிர்சாதன பெட்டி, பூந்தொட்டி, திறந்த கிணறு, வாழைமட்டை, டயர் உள்ளிட்டவற்றில், தண்ணீர் தேங்காமலும், கொசுக்கள் உற்பத்தியாகாமலும் பராமரிக்குமாறு, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, வீடுதோறும், 52 வாரங்களுக்கான துண்டு பிரசுர அட்டவணை ஒட்டப்பட்டுள்ளது. நகராட்சி ஊழியர்கள், வாரந்தோறும் ஒவ்வொரு வீட்டு பகுதியில், கொசுக்கள் உற்பத்தி சூழல் உள்ளதா என, தீவிரமாக கண்காணித்து, அட்டவணையில் தேதியுடன் ஊழியர் கையொப்பம் இடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement