செங்கல்பட்டு – பெருங்களத்துார் இடையே பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை கட்ட கோரிக்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு – பெருங்களத்துார் இடையே, தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தங்களில் இருந்து அகற்றப்பட்ட பயணியர் நிழற்குடையை, மீண்டும் கட்டித்தர வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு முதல் பெருங்களத்துார் வரையிலான சாலை எந்நேரமும் போக்குவரத்து அதிகமுள்ள சாலையாகும். போக்குவரத்து நெரிசலை கருத்தில் வைத்து, ஆறு வழிச்சாலையாக இருந்த இந்த நெடுஞ்சாலையை, எட்டு வழிச்சாலையாக மாற்ற நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.

சாலை விரிவாக்கத்தின்போது, செங்கல்பட்டு, பரனுார், சிங்கபெருமாள்கோவில், கீழக்கரணை, மறைமலைநகர், காட்டாங்கொளத்துார், பொத்தேரி, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், வண்டலுார், பெருங்களத்துார் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் இருந்த பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன.

ஆனால், சாலை விரிவாக்க பணிகள் முடிந்தும், பயணியர் நிழற்குடைகள் மீண்டும் அமைக்கப்படவில்லை. இதனால், நிறுத்தம் எங்கிருக்கிறது என தெரியாமல் பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அகற்றப்பட்ட நிழற்குடையை மீண்டும் அமைக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும், அப்போதைய கலெக்டர் ராகுல்நாத்திற்கும் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர்.

கலெக்டர் உத்தரவிட்டும் உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல், கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் வைத்து, பயணிகள் நிழற்குடை அமைக்க, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

@quote@ தேசிய நெடுஞ்சாலையில், பேருந்து பயணியர் நிழற்குடை இல்லாததால், பேருந்துகளும் குறிப்பிட்ட ஆங்காங்கே நிறுத்தப்படுகின்றன. மழை மற்றும் வெயிலில், முதியோர், குழந்தைகளுடன் வரும் பயணியர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். அகற்றப்பட்ட நிழற்குடைகளை மீண்டும் அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். – அ.ராமதாஸ் சமூக ஆர்வலர், சிங்கபெருமாள்கோவில்.quote

Advertisement