சிலம்ப போட்டியை மதிப்பீடு செய்ய 'சென்சார் டிஜிட்டல் போர்டு': மதுரை இளைஞரின் கண்டுபிடிப்பு
மதுரை: சிலம்ப போட்டியை பாரபட்சமின்றி துல்லியமாக மதிப்பீடு செய்யும் வகையில் வீரர்கள் அணிவதற்கான சென்சார் சிப், புள்ளிகளை மதிப்பீடு செய்யும் சென்சார் டிஜிட்டல் போர்டு (எஸ்.டி., டிஜிஸ்கோர்) கண்டுபிடித்துள்ளார் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி சிவபாண்டியன் 26.
அவர் கூறியதாவது:
மூன்றாண்டுகள் இதுகுறித்து ஆய்வு செய்தேன். 'நவ்' எனும் 'ப்ராசசர்' மூலம் இந்த கருவியை கண்டுபிடித்தேன்.
எதிரெதிர் அணியினருக்கான ஒரு செட் கிட், டிஜிட்டல் டிஸ்பிளே அனைத்தும் சேர்த்து ரூ.80 ஆயிரம் செலவானது. இதை விளையாட்டு வீரர்கள் வாங்க வேண்டியதில்லை. போட்டி நடத்தும் சங்கங்கள் வாங்கினால் போதும். இதில் உள்ள பேட்டரியின் மூலம் 3 நாட்களுக்கு 'பேக்கப்' விவரங்களை சேகரிக்க முடியும். பல ஆண்டுகளுக்கு இந்த டிஸ்பிளே பயன் தரும். போட்டியில் முதல் பாதியில் ஒரு நிமிடம், இரண்டாம் பாதியில் அரை நிமிடம் தான் மொத்தமே. மின்னல் வேகத்தில் குச்சியால் எதிரில் உள்ளவரை தொடுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால் மதிப்பெண்கள் வழங்குவதில் அவ்வப்போது மோதல் ஏற்படும். எனவே துல்லியமாக போட்டியை மதிப்பீடு செய்வதற்கு இந்த உபகரணங்கள் உதவும்.
எதிரெதிராக இரண்டு பேர் விளையாடும் போது அவர்களது கை, கால், முதுகு, இடுப்பு, வயிறு உட்பட 9 இடங்களிலும், விளையாடும் குச்சியிலும் சென்சார் சிப்கள் கழற்றி மாட்டும் வகையில் பொருத்தப்படும். வயர்கள் இருக்காது. முதுகின் பின்னால் உபகரணம் பொருத்தப்பட்டு சிப்கள் இணைக்கப்பட்டிருக்கும். ஒருவரின் குச்சி மற்றொருவர் மீது பட்ட உடன் அது மதிப்பெண்ணாக டிஜிட்டல் ஸ்கோர் போர்டில் காண்பித்து விடும். யாரும் யாரையும் ஏமாற்ற முடியாது. அனைத்து தொடுகைகளும் துல்லியமாக பதிந்து விடும். நேரமும் மிச்சமாகும். ஒவ்வொரு போட்டிக்கும் நடுவர் கண் கொட்டாமல் துல்லியமாக கவனிக்க வேண்டியதில்லை.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இக்கருவி குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். விரைவில் காப்பீட்டு உரிமைக்கும் விண்ணப்பிக்க உள்ளேன் என்றார்.