போக்குவரத்து நெரிசல் : வாகன ஓட்டிகள் அவதி

வேப்பூர்: வேப்பூரில் போக்குவரத்து போலீசாரை நியமித்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது.

இப்பகுதியிலிருந்து பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி செல்ல முடிவதால் தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வேப்பூர் வந்து செல்கின்றனர்.

வேப்பூரில் அரசு அலுவலகங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு தினசரி வருகின்றனர். இதனால், வேப்பூர் கூட்டுரோட்டில் 24 மணிநேரமும் போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

இப்பகுதியில், சர்வீஸ் ரோடு, சாலை சந்திப்புகளில் வேகமாக இயக்கப்படும் வாகனங்களால் விபத்து அபாயம் அதிகரிக்கிறது.

மேலும், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை சாலையிலேயே தாறுமாறாக நிறுத்தி செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த போக்குவரத்து விழிப்புணர்வு பலகைகள் வைக்கவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நியமிக்கவும் எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement