மனதில் வேண்டாமே ஊனம்: -தங்கமகன் சந்தோஷ்

உடலில் ஊனம் இருந்தாலும் மனதில் ஊக்கம் கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் ஆறு ஆண்டுகளாக தமிழக அளவில் தங்கம், தேசிய அளவில் வெள்ளியை தன்வசம் வைத்திருக்கிறார் மதுரை மாவட்டம் சோழவந்தானை சேர்ந்த 27 வயது இளைஞர் சந்தோஷ்குமார்.


இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழக கபடி அணியிலும் இடம்பிடித்து பல சாதனைகள் படைத்துள்ளார். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அரசு பணியும் பெற்றுள்ளார்.

தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக இவரிடம் பேசியதிலிருந்து...

அப்பா மூர்த்தி டிரைவர், அம்மா முருகேஸ்வரி குடும்பத்தலைவி. பிறவியிலேயே என் 2 கால்களும் வெவ்வேறு உயரங்களில் இருந்ததால் சரியாக நடக்க முடியாது. 60 சதவீத ஊனம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். நான் படித்த திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுக்கு முக்கியத்துவம் இருக்கும். 8ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு கபடி மீது ஆர்வம் வந்தது. பள்ளி முடிந்தவுடன் நண்பர்களுடன் தினமும் வைகையாற்றில் கபடி விளையாடுவேன்.

உள்ளூர் போட்டிகளில் கலந்து கொள்வேன். போட்டிகளுக்காக செல்லும் போது மற்றவர்கள் என்னை பரிதாபமாக பார்ப்பது வேதனையாக இருக்கும். ஆனால் என் நண்பர்கள் அவர்களில் ஒருவராக என்னை சேர்த்து எனக்கு ஊனம் இருப்பதையே மறக்கச் செய்தனர். பி.காம்., முடித்த பிறகு, என்ன செய்வதென்று தெரியாமலிருந்த என்னை மாற்றுத்திறனாளி கபடி வீரர் சரண், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் அசோசியேஷன் தடகளப் பயிற்சியாளர் ரஞ்சித்திடம் அறிமுகம் செய்தார். அவரின் துணையோடு தீவிர பயிற்சி செய்து தமிழக கபடி அணியில் இடம் பிடித்தேன்.


முதன் முதலில் 2021ல் பெங்களூருவில் தேசிய கபடி போட்டியில் தமிழக அணிக்காக களம் இறங்கினேன். பிறகு பல போட்டிகளில் கலந்து கொண்டு எனது அணியை வெற்றி பெறச் செய்துள்ளேன். பலமுறை ஆட்டநாயகன், 'ஆல்ரவுண்டர்' விருதுகளை தட்டிச் சென்றுள்ளேன். எனது அணி வெற்றி பெற்றாலும் எனக்கான தனிப்பட்ட அங்கீகாரம் இல்லாதது போல் தோன்றியது. அதன்பின் ஈட்டி எறிதலில் பயிற்சி பெற்று 6 ஆண்டுகளாக தமிழக அளவில் ஈட்டி எறிதலில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறேன்.

2023ல் கோவாவில் நடந்த தேசிய ஈட்டி எறிதலில் 2ம் இடம் பிடித்து வெள்ளி வென்றேன். என் வாழ்க்கையின் சிறப்பான தருணம் அது. சக வீரர்களான மனோஜ், கணேசன் என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். தற்போது விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வேளாண் வணிகத்துறையில் இளநிலை உதவியாளராக பணியில் உள்ளேன்.

என் குடும்பத்தில் பொருளாதார வசதியில்லாததால் பயிற்சி காலங்களில் எலக்ட்ரீசியன் உதவியாளராகவும், தேங்காய் லோடுமேன் வேலைக்கும் சென்றிருந்தேன். தேசிய அளவில் வென்ற பின்னரே அரசின் உதவி கிடைத்தது. எதிர்காலத்தில் சர்வதேச போட்டிகள், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்று இந்தியா, தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதே லட்சியம்.

என்னைப் பொறுத்தவரை உடல் ஊனம் ஒரு பொருட்டல்ல. மனது மட்டும் ஊனமாகி விடக்கூடாது. உறுதியுடன் போராட வேண்டும். நிறைய பேருக்கு விளையாட்டு துறையில் இருக்கும் வாய்ப்புகள் தெரியவில்லை. மாணவர்கள் இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டால் பல விளையாட்டு வீரர்கள் உருவாகி விடுவார்கள். இப்போதெல்லாம் குழந்தைகள் விளையாட விரும்புவதில்லை. அலைபேசிக்கும், டி.வி.,க்கும் அடிமையாகி விட்டனர். மாணவர்கள் திசை மாறி செல்வதை விளையாட்டு தடுக்கும். பெற்றோர் அவர்களை ஊக்குவித்து விளையாட செய்ய வேண்டும் என்றார்.


இவரை வாழ்த்த 63857 63949.

Advertisement