கட்டண விவரங்களை பள்ளிகள் 'ஓப்பனாக' வெளியிட வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உறுதி செய்ய கோரிக்கை

கோவை: கோவையைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர், தனியார் பள்ளிகளின் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டண விவரங்களை கோரி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். தகவல் வழங்குவதில் அதிகாரிகள் காலதாமதம் செய்ததால், அவர் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையர் இளம்பரிதி, மனுதாரர் கேட்ட முழுமையான தகவல்களை வழங்க உத்தரவிட்டார்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார், சி.பி.எஸ்.இ., மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை பள்ளி வளாகம், இணையதளம் மற்றும் சேர்க்கை விண்ணப்பங்களில் வகுப்பு வாரியாக கட்டாயம் வெளியிட வேண்டும்.

இதுகுறித்த ஆய்வு அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஜூன் 15ம்தேதி சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் தகவல் ஆணையத்தின் இந்த உத்தரவு, கோவை மாவட்டத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திடமிருந்து, பள்ளிகளுக்கு எந்தவித அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை. உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்யும் வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம், நன்கொடை மற்றும் பிற மறைமுக வசூல்கள் நடைபெறுவதைத் தடுக்க, அனைத்து பள்ளிகளிலும் கல்விக் கட்டண விவரங்களை கட்டாயம் காட்சிப்படுத்த மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement