விழுப்புரம் அருகே நெல் குவியலுடன் விவசாயிகள்  தவிப்பு: கொள்முதல் நிலையம் முடங்கியதால் வேதனை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே நெல் கொள்முதல் நிலையம் இயங்காததால், நெல் குவியல்களுடன் விவசாயிகள் தவித்து வருகின்றனர். விழுப்புரம் அருகே வளவனுார், சிறுவந்தாடு உள்ளிட்ட சுற்றுப்பகுதி விவசாயிகளின் கோரிக்கை ஏற்று, பூவரசன்குப்பம் கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் தொடங்கி இயங்கி வருகிறது.

கொள்முதல் நிலையம் தொடங்கி 15 நாட்களுக்கு மேலாகியும், நெல் கொள்முதல் நடக்காததால், நெல் குவியல்கள் திறந்த வெளியில் போட்டு வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து, பூவரசங்குப்பத்தைச் சேர்ந்த அருவபாலன் உள்ளிட்ட விவசாயிகள் கூறியதாவது:

பூவரசங்குப்பத்தில் கடந்தாண்டு முதல் நேரடி நெல்கொள்முதல் நிலையம் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இந்தாண்டு சொர்ணாவாரி பருவ நெல் அறுவடை நடந்து வருவதால், கடந்த மாதம் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. தொடங்கிய முதல் நாளில் மட்டும் 400 மூட்டை நெல் கொள்முதல் செய்தனர். அதன் பிறகு கொள்முதல் செய்வதை நிறுத்த விட்டனர். ஆனாலும், 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துவிட்டு, நெல்லை கொண்டு வந்து குவில்களாக கொட்டி வைத்து காத்துள்ளனர். 12 ஆயிரம் மூட்டைகள் நெல் குவியல் காத்திருப்பில் உள்ளது. மேலும், 50 ஆயிரம் மூட்டை அளவில் சுற்று பகுதிகளில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரவும் காத்திருக்கின்றனர். தற்போது, நெல் கொள்முதல் நடக்காததால், திடீர் மழையால் பாதிக்கும் என நெல் குவியலோடு காத்துள்ள விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இந்த நெல்கொள்முதல் நிலையத்தை நம்பி சிறுவந்தாடு, மோட்சகுளம், பூவரசன்குப்பம், புதுப்பாளையம், பஞ்சமாதேவி, கள்ளிப்பட்டு, தாதாம்பாளையம், ராம்பாக்கம் உள்ளிட்ட ஏராளமான கிராம விவசாயிகள் உள்ளனர். இங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சின்னக்குப்பத்தில் தொடங்கிய சிறிய மார்க்கெட் கமிட்டியும் இயங்காமல் மூடிக்கிடக்கிறது. இதனால், அருகே உள்ள புதுச்சேரி பகுதியான மடுகரை கமிட்டிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அங்கு பணம் வழங்க தாமதமாவதால் விழுப்புரம் கமிட்டிக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

இதனால், கூடுதல் செ லவினமும், நல்ல விலையும் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கின்றனர். எனவே, பூவரசன்குப்பம் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தை திறந்து, நெல்கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement