குறைகேட்பு கூட்டத்தில் நலத்திட்ட உதவி வழங்கல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு 3.17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கி, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.

அதில், வருவாய்த் துறை, வேளாண்மை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் குடிநீர், சாலை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 478 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு உடனடி தீர்வு காண சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சக்கர நாற்காலி, ஒளிரும் மடக்கு குச்சி, கருப்பு கண்ணாடி, ஊன்றுகோல், சான்றிதழ் என 33 ஆயிரத்து 370 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள், கூட்டுறவு துறை சார்பில் 2 பேருக்கு 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பயிர்க் கடன்.

மின்வாரியம் சார்பில் 3 பேருக்கு மின் இணைப்பு பெயர் மாற்றம், சமூக நலத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வைப்பு தொகை வழங்கப்பட்டது.

மேலும் விதவைச் சான்று, மாவட்ட வழங்கல் அலுவலகம் சார்பில் 2 பயனாளிகளுக்கு நகல் குடும்ப அட்டை, விலையில்லா தையல் இயந்திரம், தனிநபர் கழிவறை கட்டுவதற்கான ஆணை, புல எண் திருத்தம் என மொத்தம் 17 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவி வழங்கினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, திட்ட இயக்குனர் ரமேஷ், சமூக பாதுகாப்பு திட்ட சப் கலெக்டர் சுமதி உட்பட அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement